மகாளய அமாவாசை.. ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.. அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி தர்ப்பணம்!
ராமநாதபுரம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடியும், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் மற்றும் பிதுர்கர்மா பூஜை செய்தும் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற முக்கிய தினங்களில், மறைந்த தங்களது முன்னோர்கள் நினைவாக, பிரசித்திப் பெற்ற முக்கிய நீர்நிலைகளில் திதி கொடுத்து, தர்ப்பணம் செய்து, வழிபாடு நடத்துவது இந்துக்களின் ஐதீகம். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையை விட, புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து, பிதுர்கர்ம பூஜை செய்து வழிபாடு நடத்துவதற்கு உகந்த காலமாக கருதப்படுகிறது.
மகாளய அமாவாசை..மறக்காமல் தானம் கொடுங்கள்.. முன்னோர்களின் ஆசி தடையின்றி கிடைக்கும்
ராமேஸ்வரம் கோவில்
அந்த வகையில், மகாளய அமாவாசையான இன்று, உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் வழிபாடு நடத்தவும், அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி திதி கொடுத்து தர்ப்பணம் செய்யவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். வழக்கமாக, ராமேஸ்வரத்தில் தினந்தோறும் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், நாள்தோறும் திருவிழாபோல் காட்சியளிக்கும்.
மகாளய அமாவாசை
இந்நிலையில், இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, நேற்று இரவு முதலே பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிய தொடங்கினர். அதிகாலையிலேயே அக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடினர். தம்மோடு வாழ்ந்து மறைந்த தங்களின் முன்னோர்களின் ஆத்மா சாந்திக்காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்து, பிண்டமிட்டு, பிதுர்கர்ம பூஜை செய்து வழிபாடு நடத்தினர். கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து வழிபாடு செய்தனர்.
இராமநாத சுவாமி கோயில்
இதனைத் தொடர்ந்து, இராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் புனித நீராடினர். பின்பு நீண்ட வரிசையில் காத்திருந்து இராமநாத சுவாமி மற்றும் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். ஒரே நேரத்தில் பல்லாரயிக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், ராமேஸ்வரம் கோயிலை சுற்றியுள்ள 4 ரத வீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த 11-ம் தேதி தொடங்கிய மகாளய பட்சமானது, இன்று மகாளய அமாவாசை திதியுடன் நிறைவு பெற்றது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் ஒரே நேரத்தில் வாகனங்களில் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை ஏற்பாட்டில், நூற்றுக்கணக்கான போலீசார் ராமேஸ்வரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.