தண்டவாளத்தில் விரிசல்! புயல் வேகத்தில் ரயில்! நேருக்கு நேர் ஒடிய “கீ மேன்’.! என்ன நடந்தது தெரியுமா?
இராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக ஏற்படவிருந்த பெரும் ரயில் விபத்து ரயில்வே ஊழியரின் சமயோசிதமான செயல்பாடு காரணமாக தவிர்க்கப்பட்டது.
Recommended Video
விமானம் பேருந்து பயணங்களை விட பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்துவது, நம்புவது ரயில் பயணங்களை தான். குறைந்த செலவு அதிக வசதிகள் என்பதற்காக பெரும்பாலான பயணிகளின் விருப்பத் தேர்வாக ரயில் பயணம் இருக்கிறது.
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள தண்டவாளங்களில் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தண்டவாளங்களை கண்காணிப்பதற்காக ரயில்வே துறையில் கீமேன் எனும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நடந்து சென்று தண்டவாளங்களை ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.

ரயில்வே கீ மேன்
தண்டவாளத்தில் விரிசல், உடைப்பு, தடைகள் போன்று ஏதாவது இருந்தால் அதனை உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கும், ரயில் ஓட்டுனருக்கும் தெரியப்படுத்தி விபத்தை தடுப்பது தான் இவர்களது தலையாய கடமை அந்த வகையில், ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஏற்படவிருந்த பெரும் விபத்து ஊழியரின் சாமர்த்திய செயலால் தவிர்க்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் அருகே வாலாந்தரவை என்ற பகுதியில் ரயில் நிலையம் உள்ளது. இங்கு வழக்கம்போல் தனது ரயில்வே பணிகளை செய்து வந்த கீ மேன் வீரப்பெருமாள் என்ற இளைஞர் வாலாந்தரவை ரயில் தண்டவாளங்களை சரி செய்து கொண்டு வந்தார்.

பெரும் விரிசல்
அப்பொழுது ரயில் நிலையம் அருகே 100 மீட்டர் தூரத்தில் தண்டவாளத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த நேரத்தில் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து உடனடியாக சாமர்த்தியமாக தனது கைகளில் இருந்த சிவப்பு வண்ணக் கொடியை தூக்கி பிடித்தபடி ரயில் தண்டவாளத்தில் 200 மீட்டர் தூரம் ஓடி வந்து ஆபத்து உள்ளதை சமயோஜிதமாக ரயில்வே ஓட்டுனர்களுக்கு தெரிவித்து கொடியை காட்டி ரயிலை நிறுத்தினார்.

ரயில் நிறுத்தம்
இதைதொடர்ந்து ரயில்வே கார்டு மற்றும் ஓட்டுநர்கள் சாமர்த்தியமாக அதிவேகமாக வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை குறைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ரயிலை நிறுத்தினர். பின்னர் ரயில்வே ஊழியர்கள் மூலம் தற்காலிகமாக தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டது.

பெரும் விபத்து தவிர்ப்பு
இதுபற்றி தகவல் அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 5 மணி நேரமாகப் போராடி ரயில் தண்டவாளத்தின் விரிசலை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்தும் விசாரித்து வருகின்றனர். பெரும் விபத்திலிருந்து ரயில் பயணிகளை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் வீரப்பெருமாள் அப்பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டினர். அவரது செயல் சமூக வலைதளங்களிலும் பாராட்டுதலை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications