குடிநீருக்கு இப்படி அலைய வேண்டியிருக்கே.. புலம்பும் மக்கள்.. ராமநாதபுரம் அருகே அவலம்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆனைகுடி பகுதி அருகே குடிநீரை தேடி மக்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
தமிழகத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை மாவட்டங்களில் ஒன்று ராமநாதபுரம்.
வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், மேற்கில் மதுரை மாவட்டமும் தென்மேற்கில் தூத்துக்குடி மாவட்டமும் அமைந்துள்ளன.

மழைப்பொழிவு குறைவான மாவட்டம்
கடலை ஒட்டியுள்ள இந்த மாவட்டம் வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாகும். ஆண்டு தோறும் கோடைக்காலங்களில் இங்கு குடிநீருக்கு கூட அல்லல்படும் அவல நிலை உள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட மழை குறைவாக பெய்வதே இந்த மாவட்டத்தில் ஏற்படும் வறட்சிக்கு பிரதானமாக கூறப்படுகிறது. ஆண்டு சரசாரி மழையும் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் ராமநாதபுரத்தில் மிக குறைவு தான்.

குடிநீர் இன்றி..
இதனால் அந்த மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து உள்ளது. இதன் காரணமாக அங்கு விவசாயம் பாதிக்கபட்டதுடன், கால்நடைகள், பொதுமக்கள் குடிநீர் இன்றி பரிதவிவிக்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. கமுதி, கடலாடி, திருப்புல்லாணி, ராமநாதபுரம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் குடி தண்ணீருக்கு கடும் சிரமம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

குடிநீருக்காக பல கி.மீ செல்லும் நிலை
தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ஆனைகுடி பகுதி அருகே உள்ள திருஉத்தரகோசை பகுதியில் மக்கள் குடிநீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பலரும் குடங்களை தள்ளுவண்டி மூலம் தண்னீர் பிடித்து வருகின்றனர். ஒரு சிலர் தள்ளுவண்டியில் குடங்களை வைத்து மோட்டார் சைக்களில் அதை இணைத்து பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.

வீணாக கடலில் கலக்கும் நீர்..
வைகை அணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி ராமநாதபுர மாவட்டம் வழியாக சென்று வீணாக கடலில் கலந்துவரும் நிலையில், மறுபுறம் ராமநாதபுர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை இருந்து வருவது மக்களுக்கு கவலை அளித்து வருகிறது. மத்திய அரசு வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கி வருவதாக கூறும் நிலையில், இது போன்று குடிநீருக்காக பல இடங்களில் மக்கள் பல கிலோமீட்டர் சென்று தண்ணீர் பிடித்து வரும் அவல நிலை தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications