சித்தாளை காட்டுக்குள் தூக்கி சென்ற 4 பேர்.. காதலனையும் தாக்கிவிட்டு.. ராமநாதபுரத்தில் அடுத்த கொடுமை
ராமநாதபுரம்: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி, இன்னமும் தமிழகத்திலிருந்து விலகவில்லை. அதற்குள் இன்னொரு கொடுமை ராமநாதபுரத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம் அருகேயுள்ள பகுதியில் வசித்து வருகிறார் அந்த இளம்பெண்.. கட்டிடத் தொழிலாளியாக, இந்த பெண் கூலி வேலை செய்து வருகிறார்... இவரது காதலன் ஒரு ஆட்டோ டிரைவராவர்.

புத்தாண்டையொட்டி, தன்னுடைய காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.. பிறகு புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் இருவரும், ஆட்டோவை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர். இதனை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று கவனித்துள்ளது. இந்த 4 பேருமே புத்தேந்தல் பகுதியை சேர்ந்தவர்கள் .. புத்தாண்டு என்பதால், 4 பேரும் அப்போது மது அருந்தி கொண்டிருந்தனர்.
காட்டுப்பகுதி: சிறிது நேரத்தில் காதல் ஜோடியிடம் வந்த அந்த கும்பல், "இந்த நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்" என்று மிரட்டியிருக்கிறது. பிறகு ஆட்டோ டிரைவரான காதலனை சரமாரியாக தாக்கிவிட்டு, அந்த பெண்ணை ஒதுக்குப்புறமான இடத்துக்கு கடத்தி சென்று, கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தனியாக மாட்டிக் கொண்டதால் போதை கும்பலிடம் இருந்து அந்த பெண்ணால் தப்பிக்க முடியாமல் போகியுள்ளது..
இதில் படுகாயம் அடைந்த அந்த பெண், நேற்று முன்தினம் இரவு , ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்ந்தார். தன்னை 4 இளைஞர்கள் தாக்கி, கூட்டு பலாத்காரம் செய்துவிட்டதாகவும், டாக்டர்களிடம் அப்பெண் அழுதுகொண்டே சொன்னார்.
தீவிர விசாரணை: உடனயாக இந்த தகவல், மருத்துவமனையில் இருந்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.. அவர் தந்த தகவலின் அடிப்படையில் புத்தேந்தல் பகுதியை சேர்ந்த அந்த 4 இளைஞர்களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இறுதியில், ராமநாதபுரம் புத்தேந்தல் பகுதியை சேர்ந்த புவனேஷ்குமார் (வயது 27), சரண்முருகன் (29), செல்வகுமார் (27), குட்டி என்ற முனீஸ் கண்ணன்(25) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.. அவர்களை 10-ந்தேதி வரை ராமநாதபுரம் ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
கேமரா: சமீபத்தில்தான், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைப் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம், பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த உடை மாற்றும் அறைக்கும் அதிகாரிகள் தற்போது சீல் வைத்திருக்கிறார்கள். அதற்குள் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் ராமநாதபுரத்தில் நடந்திருப்பது பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications