அட கொடுமையே! இதில் கூட ஏமாற்று வேலையா ஒட்டங்களை அழகாகக் காட்ட செயற்கை இன்ஜெக்ஷன்.. சவுதியில் ஷாக்
ரியாத்: சவுதி அரேபியா ஒட்டக அழகுப் போட்டியில் உரிமையாளர்கள் போடோக்ஸ் ஊசி போட்டு ஒட்டகங்களை செயற்கையாக அழகுபடுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து 40க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் அதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
அழகு போட்டிகளுக்கு எப்போதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக இருப்பார்கள். மிஸ் இந்தியா, மிஸ்டர் இந்தியா தொடங்கி மிஸ் யுனிவர்ஸ் வரை பல அழகு போட்டிகள் நடைபெறுகிறது.
மனிதர்களைப் போலவே உலகெங்கும் விலங்குகளுக்கும் அழகு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். பொதுவாக நாய் மற்றும் பூனைகளுக்கு இதுபோன்ற அழகு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்
சபரிமலை: பம்பை ஆற்றில் குளிக்கவும், பலி தர்ப்பணம் செய்யவும் அனுமதி
ஒட்டக திருவிழா
அதேபோல மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் ஆண்டுதோறும் ஒட்டகங்களுக்கு அழகுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். சவுதி அரேபியாவில் கிங் அப்துல்அஜிஸ் ஒட்டக திருவிழா உலகெங்கும் மிகவும் புகழ் பெற்றது. இந்த அழகுப் போட்டிகளில் மிகவும் அழகான ஒட்டகங்களை வளர்ப்பவர்களுக்கு சுமார் $66 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.499 கோடி) வரை வழங்கப்படுகிறது. இதில் ஒட்டகத்தின் தலை, கழுத்து, கூம்புகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு வெற்றி பெறும் ஒட்டகங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
குற்றச்சாட்டுகள்
இந்த ஆண்டிற்கான கிங் அப்துல்அஜிஸ் ஒட்டக திருவிழா இந்த மாதம் தொடங்கியது. சவுதி தலைநகர் ரியாத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள பாலைவனத்தில் ஒரு மாதம் நடக்கும் இந்த திருவிழாவில் செயற்கையாக ஒட்டங்களை அழகுபடுத்தச் சிலர் முறைகேடான வழிகளை பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இது தொடர்பாகப் போட்டி அமைப்பாளர்கள் திடீரென நடத்திய ஆய்வின் அடிப்படையில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் அழகுப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கை
சவுதி ஒட்டக அழகு போட்டியில் ஒரே நேரத்தில் இத்தனை ஒட்டகங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். இந்த அழகு போட்டிகளில் ஒட்டகங்களுக்குக் கூடுதல் அழகை ஏற்படுத்த போடோக்ஸ் ஊசி போடுவது, முகத்தைச் செயற்கையாக உயர்த்துவது உள்ளிட்ட செயற்கையான அழகுசாதன மாற்றங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தத் தடை உத்தரவை மீறிப் பல உரிமையாளர்கள் தங்கள் ஒட்டகங்களின் உதடுகளையும் மூக்கையும் பெரிதாக்கவும், விலங்குகளின் தசைகளை அதிகரிக்கவும் ஹார்மோன்களைப் பயன்படுத்தியதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
எச்சரிக்கை
மேலும், ஒட்டகங்களின் தலை மற்றும் உதடுகளில் ரப்பர் பேண்டுகள் சுற்றப்பட்டுள்ளதையும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கண்டறிந்தனர். இது போன்ற நிகழ்வுகளைக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள நிகழ்ச்சி நடத்தும் அமைப்பு, இதுபோல விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. விதி மீறலில் ஈடுபட்ட ஒட்டக உரிமையாளர்கள் மீது கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபியா
சவுதியில் நடைபெறும் இந்த ஒட்டக திருவிழாவில் போட்டியானது சர்வதேச அளவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்தத் திருவிழாவில் அழகுப் போட்டிகளைத் தவிர ஒட்டகப் பந்தயங்கள், ஒட்டக விற்பனை ஆகியவையும் நடைபெறும். பாரம்பரியத்தில் ஒட்டக இனங்களைப் பாதுகாக்கச் சவுதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அதில் இந்த திருவிழா முக்கியமானது. ஒட்டக வளர்ப்பு என்பது மத்திய கிழக்கு நாடுகளில் பல மில்லியன் டாலர் புழங்கும் தொழிலாகும்.