ஹஜ் யாத்திரை.. தடுப்பூசி போட்டு கொண்ட 60,000 பேருக்கு அனுமதி.. ஆனால் ஒரு கண்டிஷன்.. சவுதி அறிவிப்பு
ரியாத்: கொரோனா பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 ஆயிரம் சவுதி யாத்ரீகர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவலை இதுவரை எந்த நாடும் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் மிகக் கடுமையாகப் போராடி வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஹஜ் புனித பயணத்திற்கு யாத்ரீகர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்த அந்நாட்டு அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது.
ஹஜ் பயணம்
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 ஆயிரம் யாத்ரீகர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்தாண்டு ஹஜ் புனித பயணம் வரும் ஜூலை மாத இறுதியில் தொடங்குகிறது. இதில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 65 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் எவ்வித இணை நோய்களும் இல்லாதவர்கள் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொடரும் கட்டுப்பாடுகள்
தொடர்ந்து 2ஆவது ஆண்டாக, கொரோனா பரவல் காரணமாக ஹஜ் புனித பயணத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ஆண்டுதோறும் லட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் ஹஜ் பயணத்தை மேற்கொள்வார்கள். 2019ஆம் ஆண்டு சுமார் 25 லட்சம் பேர் ஹஜ் பயணத்தை மேற்கொண்டனர். ஆனால், கடந்த ஆண்டு வெறும் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
வருவாய் இழப்பு
ஹஜ் பயணத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் என்பது அந்நாட்டு அரசின் வருவாயைக் கணிசமாகப் பாதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் பல நாடுகளும் ஊரடங்கு அறிவித்துள்ளன. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இது சவுதி அரேபியா மட்டுமின்றி அனைத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு பல கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளன. அதேபோல தடுப்பூசி போடும் மணிகளையும் சவுதி அரசு மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அங்கு இதுவரை 4.60 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 7,536 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.