சேலத்தில் கழிவு நீர் தொட்டியில் விழுந்த 10 வயது சிறுமி.. ஆபத்தான நிலையில் மீட்பு.. மக்கள் மறியல்
சேலம்: சேலத்தில் மாநகராட்சி பொது கழிப்பிடத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் 10 வயது சிறுமி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிருக்கு போராடிய சிறுமியை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Recommended Video
பல முறை கோரிக்கை மனு அளித்தும் கழிவு நீர் தொட்டியை முறையாக பராமரிக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொது மக்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் செய்தனர்.
இதனால் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பல முறை கோரிக்கை
சேலம் மாநகராட்சி 16 வது கோட்டத்திற்கு உட்பட்ட புதூர் கல்லாங்குத்து பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் கூலி தொழிலாளிகள் வசித்து வரும் இந்த பகுதியில் மாநகராட்சி பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க கோரியும், கழிப்பிடத்தின் கழிவு நீர் தொட்டி ( செப்டிக் டேங்க் ) உடைந்து இருப்பதை சரி செய்திட கோரியும் அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
பின்புறம்
மேலும் இந்த கழிப்பிடத்தை பாரமரிப்பவர்கள் அவ்வப்போது அதனை மூடி விட்டு சென்று விடுவதாகவும், இதனால் கழிப்பிடத்தின் பின்புறத்தில் திறந்தவெளியை பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மாலை மற்றும் இரவு நேரத்திலும் கழிப்பிடத்தின் பின்புறத்தையே பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
10 வயது மகள்
இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் மாரியப்பன் - ஜோதி தம்பதியரின் 10 வயது மகள் ஸ்ரீமதி, பள்ளியில் இருந்து வந்து, பொது கழிப்பிடத்திற்கு சென்ற போது, கழிவறை மூடப்பட்டு இருந்ததால், பின்புறத்தில் உள்ள திறந்தவெளிக்கு சென்ற போது, அங்கிருந்த கழிவு நீர்த் தொட்டியில் தவறி விழுந்து உள்ளார். கழிவு நீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் இருந்த சிறுமியை கண்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மறியல்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிறுமி கழிவு நீர் தொட்டியில் விழுந்தது அந்த பகுதி முழுவதும் பரவவே, அங்கு வசிக்கும் மக்கள் மாநகராட்சியின் அலட்சிய போக்கை கண்டித்து திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, ஆத்தூர், திருவண்ணாமலை போன்ற பல்வேறு பகுதிக்கு செல்லும் சாலையில், பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம்
இதனால் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. கடும் போக்குவரத்து ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி சுமார் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.