குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வாக்குறுதி என்னாச்சு? நல்லா ஏமாத்திட்டாங்க.. விளாசிய இபிஎஸ்!
சேலம்: திமுக ஆட்சியில் ஏழைகளுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் திமுக குடும்பத்தினர் முதலமைச்சர் போல் செயல்படுவாதாக விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் நடைபெற்ற அதிமுக கொடியேற்றும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, ஏழைகளுக்கான திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு, போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, ஆன்லைன் ரம்மி விவகாரம், வாரிசு அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை தருவதாக கூறி வாக்குகளை பெற்றுவிட்டு ஏமாற்றி வருகிறது. 50 விதிமுறைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு ஏமாற்று நடவடிக்கை. தேர்தல் வந்தால் அழகாக பேசி வாக்குகளை பெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் முடிவடைந்த பின் கண்டுகொள்ளாமல் போவார் என்று விமர்சித்தார்.

குடும்ப அரசியல்
திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தாத்தா முதல் பேரன் வரை குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் உயர் பதவிகளுக்கு வருகின்றனர். தற்போதைய ஆட்சியில் குடும்ப நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் திமுக குடும்பத்தில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் என அனைவரும் முதலமைச்சர் போல் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சி மீது விமர்சனம்
தமிழகத்தில் திமுக மக்கள் விரோத ஆட்சியை செய்து வருகிறது. ஏழைகளுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஏராளமான திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு எதிராக குழு அமைத்தது தமிழக அரசின் பின்வாங்கும் நடவடிக்கை என்று கடுமையான விமர்சித்தார்.

ஏழைகளின் கஷ்டம் எனக்கு புரியும்
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. கிராமத்தில் பிறந்து ஏழை மக்க்ளுடன் வாழ்ந்தவன் என்பதால் அவர்களின் கஷ்டம் எனக்கு புரியும். அதனால் தான் மாணவர்களுக்கு லேப்டாட் முதல் நீட் இடஒதுக்கீடு வரை அனைத்து திட்டங்களும் செயல்படுத்த முடிந்தது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications