சுயேட்சையாக களம் இறங்குவேன்.. சீட் கிடைக்காததால் முன்னாள் அமைச்சர் திட்டம்.. சேலம் அதிமுக ஷாக்!
சேலம்: சேலம் வீரபாண்டி தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமை சீட் ஒதுக்காததால், அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி சுயேச்சையாக களம் இறங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுக நேற்று 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் 3 அமைச்சர்கள் உள்பட 48 எம்எல்ஏக்களுக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை.
இதேபோல் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் பலர் சீட் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் பலருக்கும் இந்த முறை சீட் கிடைக்கவில்லை. இதனால் அவர்களின் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வீரபாண்டியில் போட்டி
இந்நிலையில் வீரபாண்டி தொகுதியில் சீட் ஒதுக்காததால் அதிர்ச்சியடைந்த முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி சுயேச்சையாக களம் இறங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா அமைச்சரவை
1983ம் ஆண்டு எம்ஜிஆர் அமைச்சரவையிலும், 2006ம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர் விஜயலட்சுமி பழனிசாமி. சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் வீரபாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார்.

அதிர்ச்சி
ஆனால் விஜயலட்சுமி பழனிசாமிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தொண்டர்கள் வீட்டில் குவிந்தனர். சீட் கொடுக்கவில்லை என்றால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றனர்.

விஜயலட்சுமி திட்டம்
அவர்கள் மத்தியில் பேசிய அவர், ''வீரபாண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் வழங்கவில்லை. உண்மையான ஜெயலலிதாவின் விசுவாசிகளுக்கு சீட் வழங்கப்படவில்லை. ஒதுக்கப்பட்டுள்ளனர். எனவே வேட்பாளர் அறிவிப்பில் தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லை என்றால் சுயேச்சையாக போட்டியிடுவது பற்றி முடிவு செய்வோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications