தமிழ்நாட்டில் கொட்டி தீர்த்த மழை.. சேலத்தில் நீரில் மூழ்கிய தரைப்பாலம்.. பொதுமக்கள் அவதி!
சேலம்: சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழையால் மக்கள் தவித்து வருகின்றனர்.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சேலம் மாட்டம் ஏற்காட்டில் 2வது நாளாக கனமழை தொடர்கிறது., சாலைகளில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்து செல்லும் நிலையில், கேளையூர், பெலாக்காடு ஆகிய இடங்களில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்றும் கனமழை: திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மழை வெள்ளம் - பாதிப்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் கடையம்பட்டியில் கனமழை பெய்தது. பாகல்பட்டி கிராமத்தில் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், அங்குள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளதால், கல்லூரிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஊருக்குள் புகுந்த மழை நீர்
முத்துநாயக்கன்பட்டி பகுதிகளில் உள்ள கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழைநீர் கரைகளை உடைத்துக்கொண்டு சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. மேலும், குடியிருப்புகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்களை சீரமைத்து மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரியில் மழை நிலவரம்
நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஊட்டியில் உள்ள காமராசர் சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு காருதி 3வது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் சீக்கூர், மாயார், சொக்கநல்லி, மாவநல்லா உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கள்ளட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கிருஷ்ணகிரியில் மக்கள் தவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சாலைகளில் மழைநீர் தேங்கியதால், காட்டாற்று வெள்ளத்தில் இறங்கிச் செல்லும் அவல நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஒருவாரமாக பெய்த கனமழையால், ஏக்கல்நத்தம் மலைக்கிராமத்திற்குச் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
திருச்சியில் மழை பாதிப்பு
காவிரி ஆற்றில் வெள்ளம் காரணமாக திருச்சி கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால், உத்தமர்சீலி, திருவளர்சோலை உள்ளிட்ட கிராமங்களில் வாழை உள்ளிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.