சேலத்தில் பகீர்.. குடும்பத்திற்கே தெரியாத 8 மாத கர்ப்பம்! காட்டில் பிரசவ வலி! தாயும் குழந்தையும் பலி
சேலம்: சேலம் அருகே காட்டுக்குள் பிரசவம் பார்த்த போது தாயும் சேயும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கணவர் பூபதி கைது செய்யப்பட்டார்.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பூபதி (25). இவரது மனைவி பார்வதி (36). கணவன் மனைவி இருவரும் கட்டட வேலை செய்து வருகின்றனர்.
எடப்பாடி பக்கம் நடையைக் கட்டும் ஆதரவாளர்கள்.. ஓபிஎஸ் பலத்தை இழக்க காரணம் இந்த 3 விஷயங்கள்தான்..!
இவர்களுக்கு கஜேந்திரன் (3),பூமிகா (2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே மீண்டும் பார்வதி 8 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என தம்பதி நினைத்தனர்.
3ஆவது முறை கர்ப்பம்
3ஆவது முறையாக கர்ப்பமாக இருப்பதை குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தெரியாமல் தம்பதி மறைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை கணவன் மனைவி இருவரும் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் துர்கை அம்மன் கோவில் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு வந்து உள்ளனர்.
பார்வதிக்கு பிரசவ வலி
அப்போது பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை இறந்து பிறந்ததை கண்ட கணவன்-மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை பிறந்ததை குடும்பத்தினரிடம் சொல்ல முடியாது என்பதால் இறந்துபோன குழந்தையை அங்கேயே புதைத்து விடலாம் என அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
குழந்தையை புதைத்த தம்பதி
இதனையடுத்து பூபதி துர்க்கை அம்மன் கோவில் பின்புறம் ஒரு காட்டில் குழியைத் தோண்டி அதில் குழந்தையை புதைத்துள்ளார். இதனையடுத்து பார்வதி தனக்கு உடல்நிலை மிகவும் முடியவில்லை, தாகமாக உள்ளது? ஏதாவது குடிக்க வாங்கி வாருங்கள் என பூபதியிடம் கூறியுள்ளார்.
மயங்கிய பார்வதி
உடனடியாக பூபதி கடை பகுதிக்கு வந்து தண்ணீர் வாங்கிக் கொண்டு சென்று பார்வதிக்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் பார்வதியும் அங்கேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார். இதனை கண்ட பூபதி திகைத்துப் போய் செய்வதறியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
மல்லூர் காவல் துறை
அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மல்லூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பூபதி புதைத்த குழந்தையின் உடலையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்குற்றம்
இதை தொடர்ந்து பூபதியின் மீது மரணம் விளைவிக்கும் குற்றத்தைப் புரிதல் மற்றும் பிறக்கும்போது அல்லது பிறந்தபின் மரணித்த குழந்தையை ரகசியமாகப் புதைத்தல் ஆகிய இரண்டு பிரிவு கீழ் வழக்குபதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கெனவே வீட்டில் உள்ள இரு பெண் குழந்தைகளும் தற்போது தாய் உயிருடன் இல்லாமல் தந்தையும் சிறையில் இருப்பதால் ஆதரவற்று கிடப்பது காண்போரை கலங்க செய்கிறது.