மேட்டூர் அணையில் 1.65 லட்சம் கன அடி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு அலர்ட்!
சேலம்: கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,65,000 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த 2 மாதம் தொடர்ந்து கனமழை பெய்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில், 42 ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுமார் 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் உபரி நீர்வரத்து மற்றும் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில், அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனையடுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும், ஒவ்வொரு நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக ஒரு லட்சத்து 42 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை அணையில் தண்ணீர் திறக்கப்படுவதால், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு 2-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.