கோபத்துக்கு ஒரு அளவு வேண்டாமா! இப்படியா பிடித்து தள்ளுவது! புதிய பஞ்சாயத்தை கூட்டிய அமைச்சர் நேரு!
சேலத்தில் திமுக தொண்டர் மீது கோபப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு
சேலம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்ட திமுக தொண்டரை, அமைச்சர் கே.என்.நேரு மிகவும் ஆவேசமாக பிடித்து தள்ளி மேடையிலிருந்து இறக்கிவிட்ட நிகழ்வு சேலத்தில் நடந்துள்ளது.
அமைச்சர்கள் பொதுவிடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும், பொறுமை காக்க வேண்டும் என்றெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் பலமுறை எடுத்துச் சொல்லியும் அதை பலரும் கேட்டதாக தெரியவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக மிக கடுமையாக உழைத்து திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு, அமைச்சர்களின் நடவடிக்கைகள் தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்துகின்றன.

உதயநிதி வருகை
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதற்காக நேற்றிரவு சேலம் சென்ற உதயநிதிக்கு சேலம் மாவட்ட திமுக சார்பில் உற்சாக மிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சராகிய பிறகு உதயநிதி முதல்முறையாக சேலம் வருவதால் அவரை வரவேற்க திரளான திமுகவினர் வந்திருந்தனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மேடையில் நின்று தொண்டர்களின் வரவேற்பை பெற்றார்.

போட்டோ எடுக்க ஆசை
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய தொண்டர் ஒருவர் உதயநிதி பக்கத்தில் நிற்க முயன்றிருக்கிறார். இதை அருகில் இருந்த பார்த்த அமைச்சர் கே.என்.நேரு, அந்த தொண்டரை மிக ஆக்ரோஷமாக பிடித்து தள்ளி மேடையிலிருந்து கீழே இறங்கச் சொல்லி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே பிரஸ் இருக்காங்க எனக் கூறி அமைச்சர் கே.என்.நேருவை தோளில் தொட்டு சமாதானம் செய்திருக்கிறார் கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணி.

நேரு கோபம்
உதயநிதியுடன் புகைப்பட எடுக்க முயன்ற திமுக தொண்டர் மீது அமைச்சர் நேரு கோபப்பட்டதற்கு நேரமின்மையே காரணமாக கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்னர் தான் திமுக தொண்டர் மீது கல்லை கொண்டு எறிந்து முதல்வர் ஸ்டாலினுக்கு தர்ம சங்கடமான சூழலை உருவாக்கியிருந்தார் அமைச்சர் ஆவடி நாசர். இப்போது அதற்குள் அமைச்சர் நேரு இது போல் நடந்திருக்கிறார். ஸ்டாலினின் பல ஆண்டுகால கடின உழைப்பை ஒரே நொடியில் சிதைக்கும் வகையில் அமைச்சர்கள் சிலரது செயல்பாடுகள் அமைந்துள்ளன.

பொற்கிழி வழங்குதல்
இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையான எடப்பாடிக்கு இன்று செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.












Click it and Unblock the Notifications