சேலத்தில் தீண்டாமைச் சுவர்.. இருதரப்பினர் இடையே அடிதடி.. எஸ்பி அலுவலகம் முற்றுகை.. போலீஸ் குவிப்பு!
சேலம்: சேலம் மாவட்டத்தில் எழுப்பப்பட்ட தீண்டாமைச் சுவற்றால் இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு மோதல் நடந்த சம்பவத்தில் வீடியோக் காட்சிகள் வைரலாகி வருகிறது.
Recommended Video
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்கெளுக்கென உள்ள வழித்தடத்தை மீட்டுத் தரக்கோரி காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்து முறையிட்டுள்ளனர்.
500 குடும்பங்கள் வசிக்கும் பகுதி
சேலம் மாவட்டம் நங்கவள்ளி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்த மேட்டூர் பிரதான சாலைக்கு செல்ல 52 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாதைக்காக தானமாக பெறப்பட்டது. அதாவது தர்மலிங்கசெட்டியார் என்பவருக்கு சொந்தமான 38 அடி அகலத்தில் 740 அடி நீளம் கொண்ட இடத்தை நடைபாதைக்காக தானமாகப் பெறப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
திடீரென சுவர் எழுப்பிய கல்லூரி
இந்த நடைபாதையை கடந்த 52 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், அந்த சாலையை பயன்படுத்த முடியாதவாறு ஒரு சுவற்றை தனியார் கல்லூரி நிர்வாகம் எழுப்பி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு சிலர் தாங்கள் காலனியில் வசிப்பதால் வேண்டுமென்றே ஒதுக்கி வைக்கும் நோக்கத்தில் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டுள்ளதாக புகார் கூறினர்.
சுவர் இடிப்பு; அடிதடி
சுவர் எழுப்பியதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இரவோடு இரவாக தடுப்புச் சுவரை இடித்து தரை மட்டமாக்கி விட்டனர். இதனால் மற்றொரு தரப்பினர் ஆதிதிராவிடர் காலனிக்குள் புகுந்து அப்பகுதி மக்களை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இரு தரப்பும் மோதிக்கொண்ட வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
எஸ்.பி. அலுவலகம் முற்றுகை
இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தீண்டாமைச் சுவரை கட்ட ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய தலைவர் ஜீவானந்தம் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி
சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் மக்கள் கொடுத்த மனுவை வாங்கிக்கொண்டார். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் 2019ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஆதி திராவிடர் காலனியில் சுமார் 25 அடி உயர கருங்கல் சுவர் இடிந்து விழுந்தது நினைவிருக்கலாம். அந்த இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். இந்த தீண்டாமைச் சுவரால்தான் பல அப்பாவிகள் உயிரிழந்தாக குற்றம்சாட்டினர்.