கையில் கட்டைகள், பாய்ந்து வந்த கற்கள்.. ராமதாஸ்- அன்புமணி ஆதரவாளர்கள் மாறி மாறி தாக்குதல்! பரபரப்பு
சேலம்: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே வாழப்பாடி அருகே போலீசார் முன்னிலையிலேயே இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பாமகவில் கடந்த சில காலமாகவே உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. அப்பா மகன் இடையே நடக்கும் இந்த மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. சொல்லப் போனால் ராமதாஸ்- அன்புமணி இடையேயான இந்த மோதல் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகிறது.

தாக்குதல்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ராமதாஸ் ஆதரவு பாமக எம்.எல்.ஏ. அருள் காரில் சென்று கொண்டு இருந்துள்ளார். அங்கு ஒரு வீட்டில் துக்கம் விசாரிக்க அருள் சென்றதாகத் தெரிகிறது. அப்போது திடீரென அங்கு வந்த அன்புமணி ஆதரவாளர்கள், அருள் சென்ற காரை வழிமறித்துத் தாக்கியுள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்வது தெளிவாகத் தெரிகிறது. முதலில் சிலர் காரை நோக்கி ஓடி வருகிறார்கள். காரின் முன்பு நின்றவர்கள் கட்டை கொண்டு அவர்களை அடிக்கிறார்கள். இதனால் அங்குச் சலசலப்பு ஏற்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினரும் மாறி மாறி கற்களையும் வீசுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
கெட்ட வார்த்தைகள்
மேலும், காதிலேயே கேட்க முடியாத அளவுக்குக் கெட்ட வார்த்தைகளால் இரு தரப்பும் மாறி மாறி திட்டிக் கொண்டனர். அங்கு ஓரிரு காவலர்கள் இருந்த நிலையில், அவர்களும் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி சண்டையை விலக்கி விட முயல்கிறார்கள். இருப்பினும், யாரும் கேட்கவில்லை. இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அந்தப் பகுதி முழுக்க பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாறி மாறி குற்றச்சாட்டு
அந்தக் கும்பல் தன்னை கொலை செய்ய முயன்றதாக பாமக எம்எல்ஏ அருள் குற்றஞ்சாட்டியுள்ளார். மறைந்திருந்த அந்தக் கும்பல் திடீரெனத் தன்னை நோக்கி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அன்புமணி சொன்னதாலேயே கொல்ல வருவதாக அந்தக் கும்பலில் இருந்த சிலர் சொன்னதாகவும் அருள் கூறியிருக்கிறார். இதனால் சுமார் 6 கார்கள் சேதமடைந்துள்ளதாகவும் அன்புமணி சொல்லும் டீசன்ட் அன்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ் இதுதானா என்றும் அருள் கேள்வி எழுப்பியுள்ளார்.
மறுபுறம், அன்புமணி மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக பாமகவின் திலகபாமா புதிய தலைமுறை சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அருள் தான் முதலில் தொண்டர் மீது கை வைத்ததாகவும் அந்தத் தொண்டருக்கு ஆதரவாகவே பாமகவினர் சென்றதாக திலகபாமா கூறியுள்ளார். மேலும், அருள் வண்டியில் இருந்தே பல உருட்டுக் கட்டைகளும் கம்பிகளும் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்ய வலியுறுத்தல்
இது தொடர்பாக அருள் தரப்பு நீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளனர். தன் மீது கொலை முயற்சி நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக அன்புமணி மீது வழக்குப் பதிவு செய்ய கோரி அருள் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இதை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மறுபுறம் அருளை கைது செய்ய வேண்டும் என்றும் வாழப்பாடி அருகே பாமக தொண்டர்களை அருள் கும்பல் காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளதாக அன்புமணி தரப்பைச் சேர்ந்த கே.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications