‘புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’ மாறி மாறி சட்டையை பிடிக்கும் பாமக அருள், அன்புமணி ஆதரவாளர்கள்
சேலம்: பாமகவில் உள்கட்சி பூசல் பூகம்பமாக வெடித்து கொண்டிருக்கிறது. கட்சி நிறுவனர் ராமதாஸ், கட்சி தலைவர் அன்புமணி இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. தந்தை மகன் யுத்தத்தால் பாமகவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராமதாஸ் ஆதரவாளர் அருள் மீது அன்புமணி தரப்பு தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அன்புமணி மீது அருளும், அருள் மீது அன்புமணியும் மாறி மாறி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பெரும்பாலான கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியே விட்டார்கள். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியில் உள்கட்சி பிரச்சனை பெரியளவுக்கு புகைந்து கொண்டிருக்கிறது. தந்தை, மகன் பனிப்போரால் கட்சி இரண்டாக அணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அருள் அன்புமணி ஆதரவாளர்கள்
ராமதாஸ், அன்புமணி 2 ஆதரவாளர்களும் தனித்தனி டிராக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ராமதாஸின் ஆதரவாளரான சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், ஆத்தூர் அருகே வடுகபட்டி பகுதிக்கு கட்சி நிர்லவாகியின் துக்க நிகழ்வுக்கு துக்கம் விசாரிக்க சென்றார். அருள் தன்னுடைய ஆதரவாளர்களுடன் காரில் சென்றிருந்தார்.
அதேநேரத்தில் அன்புமணி ஆதரவாளர்களும் அங்கு சென்றனர். அருள் மற்றும் அவர் ஆதரவாளர்கள் கார்கள் மீது அன்புமணி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. ஒருகட்டத்தில் அருள், அன்புமணி ஆதரவாளர்கள் இரண்டு தரப்பிலும் மாறி மாறி கற்கள், கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு கடுமையான பதற்றம் நிலவியது.
அடிதடி வன்முறை
இதுதொடர்பாக வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியிருந்தது. அருள், அன்புமணி இரண்டு தரப்பினரும் பரஸ்பரம் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள். இதுகுறித்து அருள், "துக்க வீட்டிற்கு சென்று திரும்பும்போது, சோளக்காட்டில் மறைந்திருந்த அன்புமணி ஆதரவாளர்கள் எங்கள் கார்களை அடித்து உடைத்தனர். என்னை கொலை செய்த முயற்சியில் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
சுமார் 50க்கும் மேற்பட்டோர் நடத்திய தாக்குதலில் எங்களின் 6 கார்கள் சேதமடைந்துள்ளன. இதற்கு அன்புமணி தரப்பு தான் காரணம்." என்று புகார் கூறியிருந்தார். இந்த சம்பவத்தை கண்டித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "அன்புமணி வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்." என்று கூறியுள்ளார்.
மாறி மாறி புகார்
அன்புமணி மற்றும் அவரின் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் என்று அருள் தரப்பில் சேலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் அன்புமணி ஆதரவாளர்கள் அருள் மீது புகார் கூறி வருகிறார்கள். இதுகுறித்து அன்புமணி ஆதரவாளரும், வழக்கறிஞருமான பாலு, "அருள் தலைமையிலான கும்பல் தான் பாமக தொண்டர்களை காட்டு மிரண்டித்தனமாக தாக்கி கொலை செய்ய முயற்சித்தனர்.
தொடர்ச்சியாக வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வரும் அருளை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது அமைதியை குலைக்க முயற்சி செய்யும் அருளை கைது செய்து, அவரிடம் இருந்து பாமகவினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். "என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பாமகவில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications