சேலம் பில் கலெக்டர்.. செங்கல்பட்டு விஏஓ.. இந்நேரத்துல சுப்ரமணி அசிங்கப்படணுமா? பட்டா நம்பர் மாறியதா
சேலம்: பட்டா எண் தவறாக இருந்ததால், அதை மாற்ற வேண்டும் என்று விஏஓவிடம் அணுகியிருக்கிறார் விண்ணப்பதாரர்.. அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சேலம், செங்கல்பட்டு என 2 மாவட்டங்களிலும் ஒரே நாளில் 2 கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது.. அதிலும், வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் இதுபோன்ற லஞ்ச சம்பவங்கள் அதிகமாகவே நடந்து வருகின்றன. இதனால் கையும் களவுமாக சிக்கி, அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கைதாகி வருகிறார்கள்.
சாதி சான்றிதழ் கோரியும், பட்டா கோரியும், நிலம் அளவீடு, உதவித்தொகை என எண்ணற்ற உதவிகளை கேட்டு விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல நேரிடும்போது, அவர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகாரை தந்துவிடுகிறார்கள்.

ஸ்பாட்டில் அதிகாரி கைது
உடனே அதிகாரிகளும் ஸ்பாட்டுக்கு கிளம்பி வந்து, சம்பந்தப்பட்டவர்கள் கையும் களவுமாக சிக்கியதுமே, அப்போதே கைது நடவடிக்கையிலும் இறங்கிவிடுகிறார்கள். இதில் விஏஓ, தாசில்தார், முதல் பெண் அதிகாரிகள் வரை சிறை செல்வது வேதனையை தந்து கொண்டிருக்கிறது.
இதோ நேற்றைய தினம் ஒரே நாளில் 2 அதிகாரிகள் கைதாகி உள்ளனர்.. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மந்தைவெளியைச் சேர்ந்தவர் குணசேகரன்.. 39 வயதாகிறது.. நரசிங்கபுரம் நகராட்சி பில் கலெக்டர். சில நாட்களுக்கு முன்பு விநாயகபுரத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் தன்னுடைய வீட்டிற்கு பெயர் மாற்றம், சொத்து வரி மாற்றத்திற்காக குணசேகரனை அணுகியுள்ளார். அப்போது, அவர் சொத்து வரியை குறைத்து மதிப்பிட்டு தர ரூ.40,000 லஞ்சம் கேட்டு முதல்கட்டமாக ரூ.25,000 கேட்டுள்ளார்.

வீட்டுமனை பட்டா எண்
லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுரைப்படி நேற்று மதியம் ஒரு மணியளவில் குணசேகரனை விநாயகபுரம் சந்தை பகுதிக்கு ராமசாமி அழைத்து ராமசாமி பணத்தை கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பில் கலெக்டர் குணசேகரனை கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், கடமலைப்புத்துார் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பனுக்கு 50 வயதாகிறது.. இவருக்கு, மின்னல்சித்தாமூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வீட்டுமனை உள்ளது.

விஏஓ சுப்ரமணிக்கு இது தேவையா
இந்த மனையில், பட்டா எண் தவறாக உள்ளதால், அதை மாற்றம் செய்யக்கோரி, 59 வயதுடைய மின்னல்சித்தாமூர் விஏஓ சுப்பிரமணி என்பவரை அணுகி இருக்கிறார்.. இதற்கு சுப்பிரமணி, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டாராம்.. லஞ்சம் தர விரும்பாத பச்சையப்பன், செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய 10,000 ரூபாயை, பச்சையப்பன் நேற்று சுப்பிரமணியிடம் தந்தபோது, அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விஏஓ சுப்பிரமணியை கைது செய்தனர். இதில் வேதனை என்னவென்றால், சுப்பிரமணி இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வு பெற போகிறாராம்..!












Click it and Unblock the Notifications