2 மஞ்ச தாலி.. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் மிஸ்ஸான மனைவி.. அசால்ட்டா கயிறை கழட்டிய பெண்.. மலைத்த கணவர்
சேலம்: சேலத்தில் புத்தாண்டுக்கு புது டிரஸ் வேண்டும் என்று கேட்ட இளம்பெண்ணால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. இந்த விஷயத்தில் போலீசார் தலையிட்டும் புதுமண பெண்ணின் முடிவை மாற்ற முடியவில்லையாம்.. என்ன நடந்தது சேலத்தில்?
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த 27 வயது இளைஞருக்கும், கருப்பூரை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் கடந்த நவம்பரில் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. பிறகு டிசம்பர் மாதம் இருவருக்கும் திருமணமும் நடந்தது.

புது மனைவி: இந்நிலையில், திருமணமான 20 நாளில் புத்தாண்டையொட்டி, தன்னுடைய புதுமனைவியை அழைத்துக் கொண்டு, கருப்பூரிலுள்ள மாமியார் வீட்டு விருந்துக்கு வந்தார் மாப்பிள்ளை. அப்போது, தனக்கு புத்தாண்டுக்கு புதுத்துணி வேண்டும் என்று மனைவி கேட்டார். உடனே மாப்பிள்ளையும், இப்போதே திருச்செங்கோடு சென்று வாங்கிவிடலாம் என்று சொன்னார்.
ஆனால், அந்த பெண்ணோ, திருச்செங்கோடைவிட, சேலத்தில் துணி நன்றாக இருக்கும்.. அதனால் சேலத்துக்கே போய்விடலாம் என்று சொல்லி உள்ளார். இதற்கு சம்மதித்த கணவன், உடனடியாக சேலம் டவுன் பகுதிக்கு மனைவியை அழைத்து வந்தார். அங்கிருந்த கடைகளில் தனக்கு விருப்பமான துணிகளை எடுத்துக் கொண்டார் இளம்மனைவி.
புத்தாண்டு புதுடிரஸ்: பிறகு, தம்பதி இருவரும் வீட்டுக்கு செல்வதற்காக பழைய பஸ் ஸ்டாண்டு வந்தார்கள்.. அப்போது பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம்மனைவி, நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் பதற்றமடைந்த கணவர், பஸ் ஸ்டாண்டில் மனைவியை தேடினார்.. பிறகு பஸ் ஸ்டாண்டு வெளியேயும் ஓடி அலைந்து தேடினார்.. எங்கேயுமே இளம்மனைவி கிடைக்கவில்லை.
இதனால் பயந்துபோன அவர், டவுன் போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். ஆனால் மறுநாளே, டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாயமான அந்த வந்தார்.
திடீர் மாயம்: அப்போது போலீசாரிடம், கணவரை விட்டு, மாயமானது குறித்த விளக்கத்தை தந்தார்.. இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார் உடனடியாக கணவருக்கும், பெண்ணின் பெற்றோருக்கும் தகவல் தந்து ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர்.
அவர்களை பார்த்ததுமே, அந்த பெண் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்றி போலீஸ் ஸ்டேஷனிலுள்ள டேபிளில் வீசினார். ஆனால் அவரது கழுத்தில் இன்னொரு மஞ்சள் கயிறுடன் தாலி காணப்பட்டது. இதனால் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பல்வேறு தகவல்களை போலீசாரிடம் அந்த பெண் சொன்னார்.
திருமணம்: அதாவது, திருமணத்திற்கு முன்பே சேலம் கோரிமேட்டை சேர்ந்த செந்தில் என்பவரை இந்த பெண் காதலித்து வந்தாராம்.. அவரையே தற்போது கல்யாணம் செய்து கொண்டதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த புதுமாப்பிள்ளை, இந்த விஷயத்தை நிச்சயதார்த்தத்தின்போதே சொல்ல வேண்டியதுதானே? இப்போது திடீரென வந்து சொல்லி, தன்னை அவமானப்படுத்துறீயே? என் சொந்தக்காரர்கள் முகத்தில் எப்படி இனி விழிபபேன்" என்று சாந்தமாகவும், மிகவும் பொறுமையாகவும் கேட்டார்.
உடனே போலீசார் அந்த பெண்ணிடம், கணவருடன் சென்று குடும்பம் நடத்துகிறாயா? என கேட்டனர். அதற்கு மறுப்பு சொன்ன பெண், 2வது திருமணம் செய்து கொண்ட காதலனுடன் தான் குடும்பம் நடத்துவேன் என்றார்.
சமாதானம்: இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர், மகளை சமாதானம் செய்தனர். ஆனாலும், காதலன்தான் தனக்கு வேண்டும் என்று உறுதியாக சொன்ன அந்த பெண், முறைப்படி அவரையே திருமணம் செய்ய போவதாக கூறி, காதலன் கட்டிய மஞ்ச தாலியையும் கழற்றி வீசிவிட்டார். அத்துடன் முதல் கணவரை விவாகரத்து செய்து விடுவதாகவும், இப்போதைக்கு பெற்றோருடன் செல்வதாகவும் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications