மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் சஸ்பெண்டு.. பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆவேச முழக்கம்
மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
சேலம்: பலாத்காரம் செய்ததால் கர்ப்பமான மாணவிக்கு நீதிகேட்டு பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் வேம்படிதாளம் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருந்தவர் பாலாஜி. இவர் வேதியியல் ஆசிரியரும்கூட. வயது 45ஆகிறது.
பிளஸ்-2 படித்த மாணவியை 5 மாதங்களுக்கு முன்பு பள்ளி வேதியியல் ஆய்வகத்தில் வைத்து பலாத்காரம் செய்திருக்கிறார்.
கர்ப்பிணி
இதனை வீடியோவாகவும் எடுத்து, அதை மாணவியிடம் காட்டி தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி இப்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது சம்பந்தமாக விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்ததும் விவகாரம் பெரிதாக வெடித்தது.
சிறையில் அடைப்பு
பள்ளியின் தலைமை ஆசிரியரே புகார் கொடுத்தார். ஆனால் பாலாஜி தலைமறைவாகி விட்டார். எனினும் அவரை தேடி கண்டுபிடித்து, போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் சேலம் ஜெயிலில் அடைத்தனர். இந்தநிலையில் பெற்றோர், மற்றும் பொது மக்கள் இன்று பள்ளிக்கு திரண்டு வந்துவிட்டனர்.
முற்றுகை
பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்றும், பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் முழக்கமிட்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த கொண்டலாம்பட்டி போலீசார் நிலைமையை சரிசெய்ய முயன்றனர்.
சஸ்பெண்ட்
பொதுமக்களுடன் போலீசார் சமரசம் செய்தபோது, அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. இதனால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஆனால் பாதுகாப்பு போலீசார் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். இதையடுத்து, ஆசிரியர் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.