கல்வாராயன் மலையின் கனவு சார்.. ஜேஇஇ தேர்வில் வென்ற பழங்குடி மாணவி..எங்கு படிக்க போறார் தெரியுமா?
சேலம்: சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவி சுகன்யா, ஜேஇஇ (JEE) நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்றார். அவர் தற்போது எங்கு படிக்க போகிறார் என்பது தெரியுமா? மலைவாழ் மக்களின் பல நாள் கனவு நிறைவேறியுள்ளது.
சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையை அடுத்த வேளம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி சுகன்யா. மூன்று வயதில் தனது தாயை இழந்த சுகன்யா, லட்சுமணன் - சின்னபொண்ணு ஆகியோரை பெற்றோராய் ஏற்று அவர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். கரியகோயில் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்தார்.

இந்நிலையில், மத்திய அரசு நடத்திய பொறியியல் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வில், முதன்மை மற்றும் மேல்நிலை ஆகிய இரண்டு படிநிலைகளிலும் வெற்றி பெற்றார். இதன் மூலம், மாணவி சுகன்யா திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (National Institute of Technology) பொறியியல் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.
இந்த வெற்றி குறித்து மாணவி சுகன்யா கூறும் போது, "என்னுடைய பெற்றோர் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் எனக்கு நல்ல வழிகாட்டுதல்களை வழங்கினர். சாதிச்சான்று கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த எனக்கு, எங்களுடைய பள்ளி ஆசிரியர்கள் உதவியால் சாதிச் சான்றிதழ் கிடைத்தது. வெற்றி ஒன்றே குறிக்கோள் என்ற இலக்குடன் இரவு பகல் பாராமல் படித்தேன்.
அதனால், இந்த தேர்வில் வெற்றி பெற்றேன்.
எந்த தோல்வியும் நிரந்தரமானது கிடையாது. மாணவர்கள் தைரியமாக தேர்வுகளை எதிர்கொண்டு எழுதி வெற்றி பெற வேண்டும். எனக்கு திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் உற்பத்திப் பொறியியல் (Production Engineering) படிக்க போகிறேன்" இவ்வாறு மாணவி சுகன்யா கூறினார்.
இதனிடையே இதேபோல் திருச்சி பச்சமலை கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மாணவி ரோஹிணியும் ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சமலை கிராமத்தில், தொலை தொடர்பு, இணையதள சேவை, மின்சாரம் உள்ளிட்ட எல்லா வசதிகளுமே மிக குறைவு. மலைப்பகுதியான பச்சமலையில் வாழும் மலைவாழ் மாணவி ரோஹிணி. பச்சமலை அடுத்த சின்ன இலுப்பூர் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்து முடித்தார். பொதுத்தேர்வில் 423 மதிப்பெண்கள் பெற்று வென்ற அவர், நடந்த முடிந்த ஜேஇஇ தேர்வில் 73.8 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இந்த நிலையில், மாணவி ரோகினிக்கு திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (National Institute of Technology) வேதிப்பொறியியல் படிக்க போகிறார். படித்தால் எந்த உயரத்தையும் அடையலாம் என்பதற்கு இந்த மாணவிகள் சிறந்த உதாரணம் ஆவார்கள்.













Click it and Unblock the Notifications