சவுக்கு சங்கருக்கு திடீர் நெஞ்சுவலி.. அரசு மருத்துவமனையில் அனுமதி! புழலுக்கு போகும் வழியில் பரபரப்பு
சேலம்: யூடியூபர் சவுக்கு சங்கர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சவுக்கு சங்கருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக யூ டியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த மே மாத இறுதியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு எதிராக, கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

மேலும், சவுக்கு மீது கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக சென்னை, மதுரை, திருச்சி நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார் சவுக்கு சங்கர்.
சவுக்கு சங்கர் மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 10 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண் போலீசாரை அவதூறாகப் பேசிய வழக்கில், உதகை புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி புகாரின் பேரில் கைதான சவுக்கு சங்கரை உதகையில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமையன்று போலீசார் ஆஜர்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து, சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறை சார்பில் நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று, 24 மணி நேரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.
இதையடுத்து சவுக்கு சங்கரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, உதகை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அதைத்தொடர்ந்து, இன்று சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், செல்லும் வழியிலேயே சவுக்கு சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பத்திரிக்கையாளர்கள் ஆத்தூர், அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, புகைப்படம், வீடியோ எடுக்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் வெளியேறும்படி மருத்துவர்கள் கூறினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 1 அதாவது நாளை உதகை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications