அண்ணாமலை போல நாங்களும் ஒரு லிஸ்ட் வெளியிடுவோம்.. இபிஎஸ் சிறைக்கு போவார்.. தட தடக்கும் புகழேந்தி
சேலம்: அண்ணாமலை கூறியதில் என்ன தப்பு இருக்கிறது என்றும், எடப்பாடியை ஜெயிலுக்கு அனுப்பாமல் அண்ணாமலை ஓயமாட்டார் என்றும் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்று கூறினார். அண்ணாமலையின் இந்த பேச்சு பாஜக உடனான கூட்டணியில் இருக்கும் அதிமுகவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் பேச்சை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே கடுமையாக விமர்சித்தார்.

அதேபோல் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அண்ணாமலை அரசியல் முதிர்ச்சி இல்லாதவர் என விமர்சித்து வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என இரு கட்சிகளும் அறிவித்து இருந்த நிலையில் தற்போது அண்ணாமலை பேச்சால் கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலை சொன்னதில் தவறு இல்லை என்று ஓபிஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமியின் பேட்டியை பார்த்தேன். அவருக்கு அண்ணாமலை மீது அப்படி கோபம் வருகிறது.
கொள்ளையடித்தவர்களை விட மாட்டேன் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியதில் என்ன தவறு இருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது ஊழல் புகார் கொடுத்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று கூறிய முதல்வர் மு.க ஸ்டாலின், இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.

கோடநாடு பற்றி அண்ணாமலை பேசியிருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை ஜெயிலுக்கு அனுப்பாமல் அண்ணாமலை விட மாட்டார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. திருச்சியில் வரும் 24 ஆம் தேதி ஓபிஎஸ் நடத்தும் மாநாடு பிரம்மாண்டமாக இருக்கும். கடல் அலை போல மக்கள் கூட்டம் வரும். அந்த காட்சியை வரும் 24 ஆம் தேதி தமிழகம் பார்க்கத்தான் போகிறது. சேலத்திற்கும் ஓபிஎஸ் வருவார்.
திருச்சி மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம், ஜெயக்குமார், கேபி முனுசாமி உள்பட சிலரை தவிர யார் வேண்டும் என்றாலும் வரலாம். திருச்சி மாநாட்டிற்கு அன்வர்ராஜா, கே.சி.பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும். மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்றார்.
மேலும் புகழேந்தி கூறுகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல் குறித்து பட்டியல் தயாரித்து வருகிறோம். திருச்சி மாநாட்டிற்கு பிறகு அந்த பட்டியல் வெளியிடப்படும். எம்.ஜி.ஆருக்கு நிகராக எந்த தலைவரும் இல்லை. எம்.ஜி.ஆர் கொண்டு வந்த விதிகளையே எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications