தமிழகத்தை மட்டம் தட்டுவதே பாஜக அரசுக்கு வேலை! பாயும் கார்த்தி சிதம்பரம் எம்.பி.!
சிவகங்கை; தமிழ் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மட்டம் தட்டும் வேலையில் பாஜக அரசு ஈடுபடுவதாக சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசிடம் இருந்து முறையான பதில் வராவிட்டால் தமிழக எம்.பி.க்கள் குடியரசுத் தின விழாவை புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிர்ச்சி.. அபுதாபி ஏர்போர்ட்டில் திடீர் வெடிகுண்டு தாக்குதல்.. 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலி..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
ஊர்தி நிராகரிப்பு
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி, மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார், ஆகியோரை தங்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் செய்துள்ள ஒரு காரியம் தமிழக தலைவர்களை கொத்தெழ வைத்திருக்கிறது. குடியரசுத் தின விழாவில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது தொடர்பாக விஜயகாந்த் தொடங்கி முதலமைச்சர் ஸ்டாலின் வரை கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
கார்த்தி சிதம்பரம்
இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்துள்ள கார்த்தி சிதம்பரம் எம்.பி., குடியரசுத் தின விழாவில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் கடிதத்துக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து உரிய மரியாதை இல்லையெனில், இது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான முறையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஏன் புறந்தள்ள வேண்டும்?
மேலும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தமிழ் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மட்டும் தட்டுவதை பாஜக அரசு வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் கீழடி போன்ற சரித்திர சான்றுகளையும் மத்திய அரசு இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கிறது எனவும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றஞ்சாட்டினார். மேலும், ஜான்சி ராணியை முன்னிறுத்தும் மத்திய அரசு, அவருக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வேலு நாச்சியாரை மட்டும் ஏன் புறந்தள்ள வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
வலுக்கும் எதிர்ப்புகள்
இதனிடையே குடியரசுத் தின விழாவில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்ட நிகழ்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் 2008-ம் ஆண்டு குடியரசுத் தின விழாவில் தமிழக ஊர்தி பங்கேற்கவில்லை எனச் சுட்டிக்காட்டி பாஜக தரப்பில் பதில் கொடுக்கப்படுகிறது.