திமுக-பாஜக கூட்டணி.. குத்திக்காட்டிய கார்த்தி சிதம்பரம்! “பிரதமர் ஸ்டாலின்” -மேடையில் மதிமாறன் பதில்
சிவகங்கை: தேவக்கோட்டையில் நடைபெற்ற இஸ்லாமிய ஜமாத் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், திமுகவை விமர்சித்த நிலையில் அதற்கு அதே மேடையிலேயே திமுக பேச்சாளர் வே.மதிமாறன் பதிலடி கொடுத்து உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் இஸ்லாமிய ஜமாத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இதில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், திமுக பேச்சாளர் வே.மதிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், "அனைத்து கட்சிகளும் பாஜகவோடு கூட்டணி வைத்து இருக்கின்றன. பாஜகவுடன் கூட்டணி வைக்காத ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான்.
பாஜக காமெடி பன்றாங்க.. 'அவங்க’ ஜெயலலிதாவுக்கு துரோகம் பன்றாங்க! அட்வைஸ் கொடுக்கும் திருமாவளவன்!
கார்த்தி சிதம்பரம் பேச்சு
இஸ்லாமியர்கள் இஸ்லாமிய கட்சிகளில் இணைவதால் மற்ற கட்சிகளில் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை. இஸ்லாமியர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்திட வேண்டும். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்கு பிறகு இஸ்லாமியர்களின் வாழ்க்கை மிகவும் மோசமடைந்து விட்டது." என்றார்.
வே.மதிமாறன்
இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக பேச்சாளர் வே.மதிமாறன், "திமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிதான்." என்று கார்த்தி சிதம்பரம் தன்னிடம் தனிப்பட்ட முறையில் மேடையில் கூறியதாகவும் அதற்கு மேடையிலேயே தான் பதில் அளித்துவிட்டதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி
அப்பதிவில், "நீங்கள் எல்லோரும் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்கள்தான். அதனுடன் கூட்டணி வைக்காதது காங்கிரஸ் மட்டும்தான். முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சியில் இணைவதால் மற்ற கட்சிகள் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. காங்கிரசில் இணையவேண்டும். 1992 பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு முஸ்லிம்கள் வாழ்க்கை மிக மோசமானது என்றும் கார்த்திக் சிதம்பரம் எம்.பி பேசினார்.
திமுக பாஜக கூட்டணி
பேசி முடித்த பிறகும் என்னிடம் திமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் என்றார். எல்லாம் சொன்னிங்க. ஆனால், காங்கிரஸ் ஆட்சியல்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பதைச் சொல்லலையே என்றேன். அதை நான் மறுக்கலையே என்றார். நான் பேசும்போது சொல்லிவிடுகிறேன் என்றேன். சொன்னேன்.
திமுகதான் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு
முஸ்லிம் கட்சிகள் பற்றி நீங்கள் சொன்னது சரிதான். ஆனால், மசூதி இடிப்பிற்கு முன் காங்கிரசுக்கு வாக்களித்தவர்கள் யாரைதான் நம்புவது என்பதினால்தான் முஸ்லிம் கட்சிகளை துவங்கினார்கள் என்றேன். என் உரையில் அவர் கேள்விகளுக்குப் பதிலும் திமுக தான் இந்தியாவிலேயே முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு என்பதைத் தகுந்த சாட்சிகளோடும் விளக்கி; திராவிட மாடல்தான் இந்தியாவிற்கு விடியலைத் தரும்.
மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆகக்கூடாதா?
மோடியே பிரதமராகலாம். தளபதி ஆகக்கூடாதா? என முடித்தேன்.திருவண்ணாமலையிலிருந்து தேவக்கோட்டை ஜமாத் நிகழ்ச்சிக்கு என்னை உரிய நேரத்திற்கு அனுப்பி வைத்த திமுக M.P. சி.என்.அண்ணாதுரைக்கு உங்கள் பலத்த கைதட்டலுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றுதான் என் பேச்சை துவங்கினேன்." என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
விமர்சிக்கும் கார்த்தி சிதம்பரம்
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடந்த சில மாதங்களாகவே திமுகவை விமர்சித்து வருகிறார். ஆளுங்கட்சியோடு கூட்டணியில் இருப்பதால் முழுமையான சுதந்திரம் தங்களுக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி நீட் தேர்வுக்கு ஆதரவு, 7 தமிழர் விடுதலைக்கு எதிர்ப்பு என அவரது கருத்துக்கள் தொடர்ந்து திமுகவினரால் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.