தமிழகத்தில் பாஜக ஒரு பெருங்காய டப்பா! அது எப்போதும் காலியாகதான் இருக்கும்! மனோ தங்கராஜ் பரபர அட்டாக்
சிவகங்கை: சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் பாஜகவை மிகக் கடுமையான விமர்சித்துப் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பூலாங்குறிச்சியில் அழகிய கலை நயத்துடன் திகழும் செட்டிநாடு இல்லத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இதில் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பலரும் ஆர்வமாகக் கலந்து கொண்டனர்.
பெண்களுக்காக போராட்டம் நடத்த பாஜகவினருக்கு எந்த தகுதியும் இல்லை.. அமைச்சர் மனோ தங்கராஜ் சுளீர்!
அமைச்சர் மனோ தங்கராஜ்
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த ஆறு பேர் விடுதலை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்பதாகத் தெரிவித்தார்.
திராவிட அரசியல்
தொடர்ந்து பேசிய அவர், "திராவிட அரசியல் இருக்கும் வரை தமிழக அரசியலில் தலைமைக்கு வெற்றிடம் எதுவும் ஏற்படாது.. தமிழக முதல்வர் ஒரு மாபெரும் தலைவராக உருவெடுத்து உள்ளார்.. சமூக நிதியையும் ஜனநாயகத்தையும் காக்கும் ஒரு தலைவர் என்ற பெயரைத் தேசிய அளவில் பெற்றுள்ளார்.. அப்படியிருக்கும் போது தமிழ்நாட்டில் தலைமைக்கு வெற்றிடம் என பாஜக கூறுவது அபத்தம்.
பெருங்காய டப்பா
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக ஒரு காலி பெருங்காய டப்பா தான். அது எப்போதும் வெற்றிடமாகத்தான் இருக்கும்... திராவிட இயக்க அரசு இருக்கும் வரை தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடமே இருக்காது.. மேலும் வரும் காலங்களிலும் சிறப்பான தலைவர்களை உருவாக்கும் பணிகளைத் திராவிட இயக்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. திமுகவிற்குக் களங்கம் விளைவிக்க பாஜக நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.
எதிர்க்கட்சியாக
ஆளும் கட்சியாக இருக்கும் போதும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் சரி எப்படிச் செயல்பட வேண்டும் என்று திமுகவுக்குத் தெரியும். எனவே, எதிர்க்கட்சியாக இருக்கும் போது செய்ததையே இப்போதும் செய்ய வேண்டும் என அவசியமில்லை. இப்போதும் கூட மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் போதிய நிதி ஒதுக்காமலும் தான் இருந்து வருகிறது.
கல்வி மாநில பட்டியல்
இதை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுத்தே வருகிறோம். சமீபத்தில், காந்திகிராம பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பேசும் போதும் கூட கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற பிரதமர் முன்னிலையே முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினர். துணிச்சலாக இதைப் பேசிய முதல்வரை நாம் பாராட்ட வேண்டும்" என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.