சிவகங்கையில் ரூபியாவுக்கு 21 வயசுதான்.. தலை தீபாவளிக்கு தாய் வீட்டுக்கு வந்தாராம்! இவ்ளோ கோபம் ஆகாது
சிவகங்கை: தீபாவளி பண்டிகை என்றாலே ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதாகும்.. புத்தாடை, பட்டாசு, இனிப்புகளுடன் கொண்டாடி, குடும்பத்தினர் இந்த மகிழ்ச்சியை உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.. ஆனால், மகிழ்ச்சியாக இருப்பதற்காக கொலை வரை சென்றுள்ள சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. இந்த முறை தீபாவளி பண்டிகையன்றே கொலை, தற்கொலைகள் நடந்துள்ளது சோகத்தை தந்து வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே செம்மேடு என்ற கிராமம் உள்ளது.. இங்கு வேலு, பார்த்திபன் ஆகியோர் வசித்து வருகிறார்கள்.. இவர்கள் இருவருமே ஒரே கிராமத்தில் எதிர் எதிர் வீட்டில் வசித்து வருகின்றனர்.

பட்டா தகராறு
தீபாவளியன்று இவர்கள் இருவருமே பட்டாசுகள் வெடித்துள்ளனர். அப்போது வேலு மற்றும் பார்த்திபன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வேலு, அருகிலிருந்த இரும்பு ராடை கொண்டு பார்த்திபனை தாக்கியுள்ளார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த பார்த்திபன் மயக்கமடைந்து சரிந்து விழுந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. ஆனால், சிகிச்சை பலனின்றி 25 வயதான பார்த்திபன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்..
பார்த்திபனை இரும்பு ராடால் தாக்கிய வேலு தப்பி ஓடிய நிலையில், அவரை காடாம்புலியூர் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். எதிர்எதிர் வீட்டில் பட்டாசுகளை வெடித்த நிலையில், இப்படி கொலை வரை சென்றது கடலூரில் பெரும் சோகத்தை தந்துவிட்டது.
சிவகங்கை 21 வயசு ரூபியா
இதோ சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சோகம் நடந்துள்ளது.. எஸ்.புதூர் அருகே உள்ள குன்னத்தூர், களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மச்சக்காளை. இவரது 21 வயது மகள் ரூபிகா.
இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடி அருகே உள்ள ரெட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது... திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பாண்டி வேலை பார்த்து வருகிறார்.
இந்த வருடம் இவர்களுக்கு தலை தீபாவளியாகும்.. எனவே புதுமண தம்பதியான பாண்டி, ரூபிகா இருவரும் தலை தீபாவளியை கொண்டாட கடந்த 19ம் தேதி களத்துப்பபட்டி கிராமத்துக்கு வந்திருந்தனர்..
உறவினர்களுடன் சேர்ந்து தீபாவளியையும் நேற்று முன்தினம் கொண்டாடினார்கள்.. இந்நிலையில் பாண்டி நேற்று ரூபிகாவிடம் வேலைக்கு கிளம்புவதாக சொல்லி உள்ளார்..
அதற்கு ரூபிகா, தலை தீபாவளி கொண்டாட வந்துவிட்டு உடனே ஏன் வேலைக்கு செல்ல வேண்டும்? இன்னும் 2 நாள் இங்கேயே இருந்து விட்டு போகலாம் என்று சொல்லி உள்ளார்.
வாக்குவாதம்
இதனால் தம்பதி இருவருக்கும் வாக்குவாதம் வெடித்துள்ளதாக தெரிகிறது.. பிறகு, வேலைக்கு நேரமாவதாக சொல்லிவிட்டு பாண்டி கிளம்பி சென்றுவிட்டார்... இது ரூபிகாவுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது..
அவ்வளவு சொல்லியும் கேட்காமல் கணவர் வேலைக்கு சென்றுவிட்டாரே என்று மனவருத்தம் அடைந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த புழுதிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ரூபிகாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... திருமணம் ஆகி 3 மாதத்தில் இறந்ததால் தேவகோட்டை ஆர்.டி.ஓ. விசாரணையும் இதில் நடக்கிறது.












Click it and Unblock the Notifications