பிசிசிஐ செய்த அரசியல்.. ஐசிசி தொடரில் விராட் கோலியை ஓவர்டேக் செய்த மும்பை வீரர்.. இதுதான் கம்பேக்!
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதலிடத்தில் இருக்கிறார். ஜாம்பவான் வீரரான விராட் கோலியை விடவும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிக ரன்களை விளாசி தரமான கம்பேக்கை கொடுத்துள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிசிசிஐ அரசியலால் திண்டாடி வந்த அவர், தனது திறமையை நிரூபித்து காட்டியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 122 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

அந்த நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் - அக்சர் படேல் கூட்டணி சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது. சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் அழுத்தம் அதிகமாக இருந்த போதும், நிதானமாக விளையாடி 48 ரன்களை சேர்த்தார். இந்திய அணியின் வெற்றிக்கு ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் மிக முக்கியமான காரணமாக அமைந்தது.
இந்தப் போட்டி மட்டுமல்லாமல் மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், 243 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் 2வது இடத்தில் நிறைவு செய்துள்ளார். இந்திய வீரர்களில் விராட் கோலி, சுப்மன் கில் உள்ளிட்டோரை கடந்து ஸ்ரேயாஸ் ஐயர் அதிக ரன்களை குவித்திருக்கிறார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பாக இதே மாதத்தில் தான் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விரட்டியடிக்கப்பட்டார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு முழுமையான விளக்கம் கூட அளிக்கப்படவில்லை. அதன்பின் இந்திய டெஸ்ட் அணியிலும் ஸ்ரேயாஸ் ஐயரை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் மறுத்து வந்தது. ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக ஆடி வந்தார்.
உள்ளூர் கிரிக்கெட்டை விளையாடாததால், பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ நீக்கியது. இதன்பின் கடந்த ஓராண்டில் உள்ளூர் கிரிக்கெட்டின் அத்தனை தொடர்களையும் வென்று ஸ்ரேயாஸ் ஐயர் கம்பேக் கொடுத்துள்ளார். அதன் உச்சமாக இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்ல முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் பதவி கொடுக்க வேண்டும் என்ற விவாதம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications