மக்கள் கேப்டனுக்கா இந்த நிலைமை.. ஐபிஎல் தொடரில் ஆடுவதே சந்தேகமாம்.. சோகத்தில் ஸ்ரேயாஸ் ஐயர்!
மும்பை: ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் போது காயம் அடைந்த நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல் தொடர் வரை கிரிக்கெட் விளையாட வாய்ப்பே இல்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வயிற்றுப் பகுதியில் ஸ்ரேயாஸ் ஐயர் எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், எந்த வகையான உடற்பயிற்சியும் கூட செய்யக் கூடாது என்று வார்னிங் கொடுத்துள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது காயம் ஏற்பட்டது. கேட்ச் பிடிக்க பின் பக்கம் திரும்பி ஓடிய ஸ்ரேயாஸ், பந்தை பிடிக்கும் கவனத்தில் உடலின் பேலன்ஸை இழந்தார். இதனால் எக்குத்தப்பாக தரையில் விழுந்த ஸ்ரேயாஸ் ஐயர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பின்னர் ஸ்கேன் சோதனை எடுத்து பார்த்ததில் ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் உயிருக்கே ஆபத்தானதாக இருந்தது. இதன்பின் உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் தொடங்கப்பட்ட, 3 நாட்களுக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதையடுத்து ஸ்ரேயாஸ் ஐயருக்கு மருத்துவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
ஏற்கனவே நவம்பர் 30ஆம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம் செய்யப்பட்டார். தற்போது சுப்மன் கில்லும் காயம் அடைந்திருப்பதால், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி களமிறங்க வேண்டிய நிலை உருவாகியது.
ஆனால் அவரும் ஓய்வில் இருப்பதால், பிசிசிஐ நிர்வாகம் கேஎல் ராகுலை தயார் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போது மும்பையில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர், 3 மாதங்களுக்கு எந்தவித பயிற்சியையும் செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயருக்கு யுஎஸ்ஜி சோதனை செய்யப்படும். அந்த சோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர் எப்போது பயிற்சியை தொடங்கலாம் என்பது தெரிய வரும்.
இதனால் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர், ஜனவரி மாதம் நடக்கவுள்ள நியூசிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிடக் கூடும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் ஜூன் மாதம் நடக்கவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தான் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு திரும்புவார் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications