55 பேரை சிறைபிடித்த இலங்கைக் கடற்படை - ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 55 மீனவர்களை விடுதலை செய்ய கோரி இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வம்: சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கக் கோரியும் இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் இன்று முதல் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். மத்திய பேருந்து நிலையத்தில் குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடற்பகுதியில் மீன் பீடிக்கும் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பல ஆண்டுகாலமாகவே மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. சில மீனவர்கள் உயிரிழந்துள்ளனர் பல மீனவர்கள் இலங்கை சிறையில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். படகுகளை இழந்து பலர் தவித்து வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் இருந்து 400க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். மீனவர்கள் நேற்று சுமார் 9 மணியளவில் நெடுந்தீவுக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

மீனவர்கள் கைது
கடற்பகுதியில் ரோந்து பணியியல் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் கருப்பையா, பீட்டர், லியோ, உள்ளிட்ட 6 பேருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற சக்தி, பிரபு, காளிமுத்து, குமார் உள்ளிட்ட 55 மீனவர்களை படகுடன் கைது செய்து யாழ்ப்பாண மாவட்ட மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மீனவர்கள் ஆலோசனை
மீனவர்களுக்கு பரிசோதனை செய்து யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நிலையில் சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்
இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்து ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவ குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் போராட்டம்
மீனவர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தால் சுமார் 800க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுக் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் 50ஆயிரம் மீனவர்களும் ஒரு லட்சம் மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications