இலங்கை பிரச்சனைக்கு இதான் காரணம்.. “ஈழப்போர்” நினைவிருக்கா? - தமிழர்கள் உதவுவாங்க, ஆனால்..
கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு ஈழத் தமிழர் யுத்தத்துக்காக பெற்ற கடன்களே காரணம் என இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர் அருண் ஆரோக்கியநாதன் தெரிவித்து உள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியானது.

பொருளாதார நெருக்கடி
இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட பணம் இன்றி அந்நாட்டு அரசு தத்தளித்து வருகிறது.

மக்கள் போராட்டம்
இது ஒருபுறம் இருக்க இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் கொதித்து எழுந்த இலங்கை மக்கள் பதில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதால் இலங்கையின் பல நகரங்கள் கலவரமயமாகின. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவானார்.

ராஜபக்ஷே சொத்துக்கள்
பொதுமக்கள் ராஜபக்ஷேவின் வீடுகள், அவரது பெற்றோரின் கல்லரைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கினர். மேலும் அவரது கட்சி அமைச்சர்களின் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்று இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியையும், வன்முறை சம்பவங்களையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதிபர் மாளிகை
இருப்பினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்தது. அதேபோல் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷேவுக்கு எதிரான போராட்டங்களும் வீரியமடைந்து வந்தன. இந்த நிலையில் அதிபர் மாளிகைக்குள் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்த நீச்சல் குளம், படுக்கை அறை, சமையல் சூடம் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று மகிழும் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகின. பொதுமக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றப்போவதை முன் கூட்டியே தெரிந்துகொண்ட கோட்டாபய ராஜபக்ஷே அங்கிருந்து தப்பி ஓடினார்.

பிரதமர் ரணில் ராஜினாமா
இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராகவும் மக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து அனைத்து கட்சித் தலைவர்களின் பரிந்துரையை ஏற்று பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்து இருக்கிறார். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.

பத்திரிகையாளர் அருண் அரோக்கியநாதன்
இதுகுறித்து இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர் அருண் அரோக்கியநாதன் கூறுகையில், "இலங்கையின் தற்போது பொருளாதார பிரச்சனை ஏற்பட்டாலும்கூட, இதற்கான மூலக் காரணம் ஈழத் தமிழர்களுக்கு எதிரான யுத்தமாகவே இருக்கிறது. யுத்த காலத்தில் பெற்ற பல கோடி ரூபாய் கடன்கள் சேர்ந்துதான் இலங்கை தற்போதைய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. எனவே யுத்தத்திற்கான மூல வேரை கண்டறிந்து அதற்கான தீர்வை தேடாமல், தற்போது பொருளாதார சிக்கல்களை சமாளித்துவிடலாம் என்று நினைத்தால் தங்களையும், எதிர்கால சந்ததியையும் ஏமாற்றுபவர்களாவார்கள்.

மனித உயிர்களை மதிக்க வேண்டும்
அடுத்து வரும் ஆட்சியாளர்கள் மனித உயிர்களை மதிக்காமல், வளர்ச்சியை மட்டும் கவனத்தில்கொண்டால் அது நிலையான வளர்ச்சியாக இருக்காது. எனவே தமிழர்களுக்கு கவுரவமான தீர்வை வழங்கினால் மற்ற நாடுகளிடம் கையேந்தும் நிலை இவர்களுக்கு வராது. ஏனென்றால் மேற்குலகில் 13 லட்சம் புலம் பெயர் தமிழர்கள் உள்ளார்கள். அவர்களில் பலர் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்கள்
அவர்கள் இலங்கையில் முதலீடு செய்வது பெரிய விசயமே இல்லை. ஆனால், கடந்த முறை முதலீடு செய்தபோது அவர்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்தார்கள். போர் சமயத்தில் கிளிநொச்சி போன்ற பகுதிகள் சிதைந்தபோது புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு உதவிகளை செய்து அந்த பகுதியை கட்டியெழுப்பினார்கள். அவர்களுக்கு ஆட்சியாளர்கள் உத்திரவாதம் கொடுத்தால் மீண்டும் உதவுவார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications