யாழ்ப்பாணத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு!
யாழ்ப்பாணம்: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இலங்கை விவகாரங்களைக் கையாளும் சுசித்ரா துரைசுவாமிநாதன் தலைமையிலான குழு இன்று திடீரென யாழ்ப்பாணம் சென்றுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் இலங்கை மற்றும் மாலத்தீவு விவகாரங்களுக்கான இணைச் செயலராக பதவி வகிப்பவர் சுசித்ரா துரை சுவாமிநாதன். இவரது தலைமையில் மற்றொரு அதிகாரி விஸ்வேஸ் நேம்கி உள்ளிட்டோர் அடங்கிய குழு இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் சென்றனர்.
அங்கு இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர். பின்னர் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஆகியோரை சந்தித்து தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்டறிந்தனர்.
சுசித்ரா துரை சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்தில் நாளை வரை தங்கியிருப்பர். அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் அவர்கள் சந்தித்துப் பேச இருப்பதாக கூறப்படுகிறது.