7 பேரின் விடுதலைக்கு தடை விதித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்க வேண்டும்: இலங்கை அமைச்சர்
கொழும்பு: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை நாம் மதிக்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் கெஹலியா ராம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே தீர்மானிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து இந்த வழக்கில் கைதான சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதாக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் அறிவித்தார். மேலும் இது குறித்து பதில் அளிக்குமாறு அவர் மத்திய அரசுக்கு 3 நாட்கள் கெடு விதித்தார்.
இந்நிலையில் அந்த 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பு குறித்து இலங்கையின் தகவல்துறை அமைச்சர் கெஹிலியா ராம்புக்வெல்லா கூறுகையில்,
நீதித்துறையின் நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே எங்களின் தனிப்பட்ட கருத்து ஆகும். ஒவ்வொரு நாட்டின் நீதித்துறையும் தனித்துவம் வாய்ந்தது. அதை நாம் மதிக்க வேண்டும் என்றார்.