மிகப்பெரிய வெற்றி பெற்ற விஜய்.. தேர்தல் முடிவு குறித்து அண்ணாமலை கருத்து
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் தோல்வியடைந்த மு.க. ஸ்டாலின் மற்றும் சீமான் அவர்களுக்காக வருத்தப்படுகிறேன் எனவும் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக 107 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

தனித்து போட்டியிட்ட விஜய் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார். களம் கண்ட முதல் தேர்தலிலேயே விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். எம்ஜிஆர் 33.5 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், விஜய் அதைவிட கூடுதலாக அதாவது 34.8 சதவீத வாக்குகளை தாண்டியுள்ளார். இதனால் விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளார். அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழக மக்களின் தீர்ப்பிற்கு நான் தலைவணங்குகிறேன். என் மண்ணின் மக்கள் ஒரே குரலில் எழுந்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பணம் கொடுத்து வாக்கு வாங்குவதற்கு இல்லை.
குடும்ப அரசியலுக்கு இல்லை. அரசியலில் தலைமுறை மாற்றத்திற்கு. தவெக மற்றும் விஜய்க்கு வாழ்த்துகளும், நல்வாழ்த்துகளும். நீங்கள் நினைத்ததை சாதிக்க இறைவன் துணை நிற்கட்டும். மேலும், அனைத்து தேசிய ஜனநாயக வேட்பாளர்களுக்கும் வாழ்த்து கூறுகிறேன். களத்தில் கடுமையான போட்டி நிலவியது.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்; வெற்றி பெற முடியாதவர்களும் தொடர்ந்து போராடுவோம். இந்தத் தேர்தலில் தோல்வியடைந்த மு.க. ஸ்டாலின் மற்றும் சீமான் அவர்களுக்காக வருத்தப்படுகிறேன். கடைசியாக மிக முக்கியமாக, களத்தில் கடுமையாக உழைத்த தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு என் நன்றிகள். நல்ல காலம் விரைவில் வரும்! என்று பதிவிட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications