பிரபாகரன் கொல்லபட்ட தினத்தில் பிறந்த யானை: கொரியாவுக்கு வழங்க இலங்கை மறுப்பு
கொழும்பு: இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த தினமான மே 18, 2009 அன்று பிறந்த யானைக்குட்டியை தென்கொரியாவுக்கு அனுப்ப இலங்கை மறுத்துவிட்டது.
ஒரு செயலை தொடங்கும் போது மனிதர்களில் சிலர் சகுனம் பார்ப்பதுண்டு. ஆனால் சகுனம் பார்க்கும் விஷயத்தில், இலங்கை அரசு தனிப்பட்ட மனிதர்களையும் மிஞ்சியுள்ளது.
இலங்கை அரசு தென்கொரியாவுக்கு யானைக்குட்டி ஒன்றை பரிசாக வழங்க முடிவு செய்தது. இதற்காக ‘டினுடா' என்ற ஒரு யானைக்குட்டியும் தேர்வு செய்யப்பட்டது. ‘டினுடா' என்றால் வெற்றியின் நாள் என்று பொருள்.
யானைக்குட்டியை தென்கொரியாவுக்கு அனுப்ப இருந்த போது தான், அதன் பிறந்த தேதி பற்றிய விவரம் அரசுக்கு தெரியவந்தது. அந்த யானைக்குட்டி 2009-ம் ஆண்டு மே 18-ந்தேதி பிறந்துள்ளது.
அன்று தான் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அன்றையதினம் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
இதனால் அந்த யானைக்குட்டியை தென்கொரியாவுக்கு பரிசளிக்க இலங்கை மறுத்துவிட்டது. இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுற்று, அமைதி திரும்பிய நல்ல சகுனத்தில் பிறந்த அந்த யானைக்குட்டியை யாருக்கும் கொடுக்க இலங்கை விரும்பவில்லை என அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.