ராஜபக்சே அரசிலிருந்து விலகியது ஈழத் தமிழ் முஸ்லிம் கட்சி! மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு!!
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அரசில் இருந்து ஈழத் தமிழ் முஸ்லிம்களின் கட்சியான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் விலகியது. அத்துடன் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிக்கப் போவதாகவும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேன நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராஜபக்சே அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு அமைச்சரவையில் இருந்து ஈழத் தமிழ் முஸ்லிம்களின் கட்சியான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவரும் ராஜபக்சே அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த ரவூஃப் ஹக்கீம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒரு நபர், 2 முறைக்கு மேல் இலங்கை அதிபர் பதவி வகிக்க முடியாது என்கிற விதிமுறையை அகற்ற சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த கருத்து வேறுபாட்டினால் ஆளும் கூட்டணியிலிருந்து விலகுகிறோம்.
எனது சட்டத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எதிர்க்கட்சிகள் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியினருடன் விரைவில் பேச்சு நடத்தவுள்ளோம்.
இவ்வாறு ஹக்கீம் கூறினார்.