இலங்கை வரை பரவிய சசிகலா புகழ்... சிறையில் தலையனை கேட்டது குறித்து அமைச்சர் விமர்சனம்
சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளியான சசிகலா சிறையில் தலையனை கேட்டதாக இலங்கை அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
கொழும்பு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ஏசி ரூம், வீட்டுச்சாப்பாடு உள்ளிட்ட சலுகைகளை கேட்டார். இந்த விவகாரம் குறித்து இலங்கை இணை அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அந்நாட்டில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் விமர்சித்துள்ளார்.
இலங்கை சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஞ்சன் ராமநாயக்க அந்நாட்டின் இணை அமைச்சராக உள்ளார். இவர் கோகலை நகரில் அண்மையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது குறித்தும் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்தும் விமர்சித்தார். சசிகலாவுன் அந்நாட்டு அரசியல்வாதிகளையும் ஒப்பிட்டு பேசினார்.
தலையனை கேட்டராம் சசி
அவர் பேசியதாவது, "கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைபட்டிருக்கும் சசிகலா, தனக்கு தலையணை, போர்வை, ஃபேன் போன்ற சிறப்பு சலுகைகள் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அவருக்கு எந்தவித சலுகைகளும் கொடுக்கப்படவில்லை.
இலங்கையில் அப்படி இல்லை
இலங்கையில் அவ்வாறெல்லாம் எதுவும் நடக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்பன் பில, தான் சிறையில் அடைக்கப்பட்ட போது, தலையணை கேட்டார். அதுவும் கூட தலைக்கு வைப்பதற்கு அல்ல.
பெரிய வித்தியாசம் இதுதான்
மேலும், பல சொகுசுகள் வேண்டும் என்றார். இலங்கையின் நிலை இவ்வாறு தொடர்கிறது. இந்திய அரசியல்வாதிகளுக்கும் இலங்கை அரசியல்வாதிகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இதுதான்.
இந்த நிலை மாற வேண்டும்
இலங்கையில் கைதாகும் அரசியல்வாதிகளுக்கு சலுகைகள் அளிக்கிறோம். எந்த அரசியல்வாதியையும் சசிகலாவைப் போல் நடத்துவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்." இவ்வாறு இலங்கை அமைச்சர் சசிகலா குறித்து பேசியுள்ளார்.
4 ஆண்டுகள் சிறை
சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என அறிவித்த உச்சநீதிமன்றம் 3பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
சலுகைகள் கேட்ட சசி
இதைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் கடந்த 15 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் விஐபிகளுக்கு வழங்கும் சலுகைகளை தனக்கு வழங்க வேண்டும் என கூறிய சசிகலா தனது கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை சிறை நிர்வாகத்திடம் அளித்தார்.
மறுத்த சிறை நிர்வாகம்
வீட்டுச்சாப்பாடு, ஏசி அறை, வெஸ்டர்டன் டாய்லெட் போன்ற சலுகைகளை அவர் கேட்டார். ஆனால் அவற்றை சிறை நிர்வாகம் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து அவர் மற்ற கைதிகளைப்போல் சாதாரண அறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.