தமிழக மீனவர் சுட்டுக்கொலை.. விசாரணைக்கு இலங்கை கடற்படை உத்தரவு
கண்டனங்கள் அதிகரித்துள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில், நடந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு: தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும் சரோன் என்பவர் கையில் காயம் ஏற்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டிவிட்டரில் தேசிய அளவில், இந்த கொலை சம்பவம், டிரெண்ட்டாகிவருகிறது. கண்டனங்கள் அதிகரித்துள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில், நடந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடிவில், கொலைக்கு காரணமாக இருந்த கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவரும்.