இலங்கை கடற்படை கைது செய்த 24 தமிழக மீனவர்கள் சிறைகளில் அடைப்பு!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரையும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
ராமேஸ்வரத்திலிருந்து 2 விசைப் படகுகளில் சென்ற 15 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அதே போல புதுக்கோட்டையிலிருந்து 2 படகுகளில் சென்ற 9 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 24 மீனவர்களையும் கைது செய்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரையும் வரும் 15-ஆம் தேதி வரை யாழ்ப்பாணத்தில் சிறைக் காவல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் ராமேஸ்வரம் மீனவர்களை மார்ச் 17-ந் தேதி வரை காவலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வவுனியா சிறையில் ராமேஸ்வரம் மீனவர்கள் அடைக்கப்பட்டனர்.