தெரிந்த பிசாசான எனக்கே ஓட்டுப் போடுங்க! - தமிழர்களிடம் ராஜபக்சே கெஞ்சல்
யாழ்ப்பாணம்: தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு மேலானது என்பதை எண்ணியாவது எனக்கு ஓட்டு போடுங்கள், என்று கூறி யாழ்ப்பாண தமிழர்களிடம் ஓட்டுக் கேட்டார் ராஜபக்சே.
வரும் ஜனவரி 8-ம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து, அவரது மந்திரிசபையில் சுகாதார அமைச்சராக இருந்த இலங்கை சுதந்திரா கட்சி தலைவர் மைத்ரிபால சிறிசேனா பொது வேட்பாளராக களம் இறங்கினார்.
இலங்கையில் பிரதான முஸ்லிம் கட்சியான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், எதிர் அணி வேட்பாளர் சிறிசேனாவை ஆதரிக்கப்போவதாக அறிவித்து, ராஜபக்சேவுக்கு அதிர்ச்சி அளித்தது.
அடுத்த 2 நாளில், தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பும், சிறிசேனாவுக்கு தனது ஆதரவை அறிவித்துள்ளது. சிங்கள புத்த மக்களின் ஓட்டு வங்கியை மட்டுமே இப்போது ராஜபக்சே சார்ந்து இருக்கிறார்.
அவரை ஆதரித்து வந்த எம்.பி.க்கள் பலரும் ஒருவர் பின் ஒருவராக எதிர்முகாமுக்கு சென்று, பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
நேற்றும் கூட அச்சல ஜக்கோடா என்ற எம்.பி., ஆளும் முன்னணியிலிருந்து விலகி, எதிர் அணி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு தனது ஆதரவை அறிவித்துள்ளார். இதன்மூலம் எதிர்முகாமுக்கு சென்ற 26-வது எம்.பி. என்ற பெயரை அவர் தட்டிச்சென்றுள்ளார்.
தமிழர் பகுதியில்...
இந்த நிலையில், எப்படியாவது தமிழ் மக்களின் ஓட்டுகளை கைப்பற்றி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்து வந்த வடக்கு மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்த தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிடுகிற சிறிசேனா வடக்கு பகுதி மக்களுக்கு புதியவர். ஆனால் நான் நாட்டின் அதிபர் என்ற வகையில் உங்களுக்கு (தமிழ் மக்களுக்கு) நிறைய செய்திருக்கிறேன்.
நான் உங்களுக்கு மின்சார வசதி செய்து தந்திருக்கிறேன். உங்களுக்கான பிற வசதிகளையும் மேம்படுத்தி இருக்கிறேன்.
தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு மேலானது என்று சொல்வார்கள். அதை நினைத்தாவது எனக்கு ஓட்டு போடுங்கள்.
இங்கே வடக்கு மாகாண கவுன்சிலில் ஆட்சி நடத்துகிறவர்கள் (தமிழ் தேசிய கூட்டமைப்பு), உங்களுக்கு பணியாற்ற ஒதுக்கித்தந்த பணத்தை பயன்படுத்தவில்லை," என்று பேசினார்.
தமிழர்களின் குழந்தைகளை வாங்கி கொஞ்சினார். எப்படியாவது எனக்கே ஓட்டுப் போடுங்க என்று கெஞ்சினார்.
ஓட்டுப் போடாமல் தடுக்க திட்டம்?
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் ஓட்டு போட திரளாக வராவிட்டால், அது தனக்கு சாதகமாக அமையும் என்று ராஜபக்சே கணக்கு போட்டு, தமிழர்களை ஓட்டு போட விடாமல் தடுப்பதற்காக ராணுவத்தை குவித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறை ராஜபக்சே அதிபரானபோது, தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். அது ராஜபக்சேவுக்கு சாதகமாக அமைந்தது நினைவிருக்கலாம்.