பையில் இருந்த பாதி சாண்ட்விச்.. ரூ.1.43 லட்சம் அபராதம்.. இப்டிக்கூட பண்ணுவாங்களா?
பாதி சாப்பிட்டு மீதம் வைத்திருந்த சிக்கன் சாண்ட்விச்சிற்காக அபராதம் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஆஸ்திரேலிய மாடல் ஒருவர்.
சிட்னி: ஆஸ்திரேலிய மாடல் ஒருவர், பாதி சாப்பிட்டு விட்டு மீதம் வைத்திருந்த சாண்ட்விச்சுக்காக விமான நிலையத்தில் ரூ. 1.43 லட்சம் அபராதம் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நாம் வாங்கும் உணவின் அளவு கடைக்கு கடை மாறுபடும். சில உணவகங்களில் விலை உயர்ந்த உணவுகளைக்கூட, ஸ்பூனில் ஒரே வாயில் சாப்பிட்டு விடலாம். அவ்வளவு குறைவாக இருக்கும். வேறு சில உணவகங்களிலோ நாம் கொடுத்த பணத்திற்கு ஈடாக அவர்கள் கொடுக்கும் உணவுகளைச் சாப்பிட முடியாது. அந்தளவிற்கு அதிகமாக இருக்கும்.
அப்படியான சூழ்நிலைகளில் சாப்பிட முடியாத மீதமுள்ள உணவை பார்சலில் வாங்கிச் சென்று, வீட்டில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என நாம் திட்டமிடுவோம். ஆனால் அப்படி நினைத்து ஆஸ்திரேலிய மாடல் செய்த செயல் ஒன்று அவரைச் சிக்கலில் மாட்ட வைத்துள்ளது.
சாண்ட்விச்
சம்பந்தப்பட்ட அந்த மாடல் அழகியின் பெயர் ஜெஸிக்கா லீ. இவர் ஐரோப்பாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்த போது, இடையில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் சாப்பிடுவதற்காக சப்வே சாண்ட்விச் ஒன்றை வாங்கியுள்ளார். ஏற்கனவே நிறைய பயணங்களால் சோர்ந்து போயிருந்த அவர், மீதமுள்ள 11 மணி நேரப் பயணத்தைக் கருத்தில் கொண்டு, 12 இன்ச் அளவிலானா பெரிய சாண்ட்விச்சை சாப்பிட வாங்கியுள்ளார்.
மீதி பாதி
ஆனால் அந்த சாண்ட்விச்சை அவரால் முழுமையாக சாப்பிட முடியவில்லை. பாதி சாண்ட்விச்சை சாப்பிட்டதும் அவருக்கு வயிறு நிரம்பி விட்டது. எனவே மீதியை பயணத்தின்போது சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று பத்திரப்படுத்தியுள்ளார். ஆனால் அதையும் அவரால் முழுமையாக சாப்பிட முடியாததால், அது அப்படியே அவரது பையிலேயே இருந்துள்ளது.
லெட்டூஸ்
பாதி சாப்பிட்ட நிலையில் இருந்த சாண்ட்விச்சுடன் ஆஸ்திரேலிய சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார் ஜெஸிக்கா. தனது கைப்பை மற்றும் பிற உடைமைகளின் விபரத்தை மட்டும் கூறிய அவர், தனது பையில் சிக்கன் இருப்பதை மட்டும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதில் லெட்டூஸ் இருப்பதை அவர் விபரமாகக் கூறவில்லை.
ரூ. 1.43 லட்சம் அபராதம்
இதனால் அவருக்கு 2,664 ஆஸி டாலர் அபராதம் விதித்து விட்டனர் சுங்க அதிகாரிகள். இது இந்திய மதிப்பில் ரூ.1.43 லட்சம் ஆகும். இந்தத் தொகையை 28 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறியிருப்பதாக தனது சமூகவலைதளப் பதிவில் கூறியுள்ளார் ஜெஸிக்கா. மேலும் அதில், "நான் அண்மையில் தான் வேலையில் இருந்து விலகினேன்.
காஸ்ட்லி தவறு
இப்போது இவ்வளவு பெரிய தொகையை என்னால் உடனே செலுத்த முடியுமா என்று தெரியவில்லை. இது என்னுடைய தவறு தான் என்று நான் உணர்கிறேன். என் தவறுக்கு பொறுப்பேற்று அபராதத்தைக் கட்ட முயற்சிகள் எடுத்து வருகிறேன். என்னைப் போன்ற காஸ்ட்லி தவறுகளை யாரும் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே இதனை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆச்சர்யமும், அதிர்ச்சியும்
ஜெஸிக்காவின் இந்தப் பதிவு கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதற்கெல்லாம்கூட அபராதம் போடுவார்களா என ஜெஸிக்காவின் பதிவைப் பார்த்து, சிலர் ஆச்சர்யமும், மற்றும் அதிர்ச்சியும் கலந்த பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த தவறுக்கு இவ்வளவு அபராதம் விதித்திருக்க வேண்டாம், எச்சரித்து அபராதத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம் என ஜெஸிக்காவிற்காக இரக்கப்பட்டுள்ளனர் சிலர்.