ராமமோகன் ராவ் கட்டிலில் தங்கம் பதுக்கல்- சம்பந்தி வீட்டில் 100 கோடி ஆவணங்கள் சிக்கியது
தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி போட்டுக்கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் காலை 6 மணி முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
நகைகள், ஆவணங்கள்
சென்னை அண்ணா நகர் தொடங்கி ஆந்திராவின் சித்தூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள வீடுகளில் நடைபெற்று வரும் சோதனையில் பல கோடி பணம், நகைகள், ஆவணங்கள் சிக்கியுள்ளன.
கட்டிலில் தங்கம்
ராம மோகன் ராவ் வீட்டில் உள்ள குடோனில் இருந்து கட்டுக்கட்டாக புது ரூபாய் நோட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது கட்டிலில் தங்கக் கட்டிகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ராம மோகனராவின் காரிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
100 கோடி ஆவணங்கள்
தமிழக தலைமைச் செயலர் ராம மோகனராவ் சம்பந்தி வீட்டில் இருந்து ரூ.100 கோடி சொத்திற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சித்தூரில் உள்ள அவரது சம்பந்தி பத்ரிநாராயணா வீட்டில் இருந்து ரூ.100 கோடிக்கான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே இங்கு இருந்து 40 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வருமான வரி சோதனை
இதேபோல் திருவான்மியூரில் உள்ள அவரது மகன் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இவை மதிப்பிடப்பட்டு மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகள் எவ்வளவு என்பதை வருமான வரித்துறையினர் அறிவிப்பார்கள்.