100 ஆண்டுகளை கடந்த பாம்பன் ரயில் பாலம்... இந்தியாவின் பொக்கிஷம்
சென்னை: பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கி இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுச் சென்ற வரலாற்று பொக்கிஷம் என்றால் மிகையாகது.
2,340 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தையும் கடலுக்குள் அமைந்து இருக்கும் பாம்பன் தீவையும் இணைக்கிறது
பாம்பன் ரயில் பாலம் நூறு ஆண்டுகளை கடந்தும் இப்போதும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
ராமேஸ்வரம்
பாம்பன் தீவில்தான் இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் ராமேசுவரம் அமைந்துள்ளது. இங்குள்ள ராமநாத சுவாமியை தரிசிக்க இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் வழியாக ராமேசுவரத்துக்கு ரயிலில் செல்வது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.
கப்பல் போக்குவரத்து
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து பாக் ஜலசந்தி பகுதிக்கு கப்பல்கள் சென்று வருவதற்காக கடந்த 1854-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் பாம்பனில் சுமார் 80 அடி அகலம், 300 அடி நீளத்தில் கால்வாய் தோண்டப்பட்டது. பின்னர் அந்த கால்வாயில் சிறிய அளவிலான சரக்கு கப்பல்கள் சென்று வரத்தொடங்கின.
ரயில்வே பாலம்
அப்போது மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் செல்வதற்கு படகுகளை மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் அந்த தீவினை மண்டபத்துடன் இணைக்க ஒரு ரயில்வே பாலத்தை அமைக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். அதுவும் வர்த்தக நோக்கத்தில் தான். காரணம் ராமேசுவரத்தில் பிடிபடும் பல்வேறு வகை மீன்கள், நண்டுகள் ஆகியவற்றை சென்னை போன்ற நகரங்களுக்கு ரயில் மூலம் எடுத்துச் செல்ல முடிவு செய்தனர்.
146 இரும்புத்தூண்கள்
இந்த புதிய ரயில்வே தூக்குப்பாலத்தை கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகள் 1902-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த பாலத்திற்காக 146 இரும்பு தூண்கள் கடலுக்குள் அமைக்கப்பட்டு அவற்றின் மீது 145 இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டன.
11 ஆண்டுகால பணி
பின்னர் ரயில் செல்வதற்காக தண்டவாளம் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் 1913-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு அதே ஆண்டு டிசம்பர் மாதம் முழுமையாக முடிக்கப்பட்டது. இந்த பாலத்தை அமைக்கும் பணிகளை செய்தவர் ஆங்கிலேய பொறியாளர் ஷெர்சர். பல்வேறு இயற்கை சீற்றங்கள், தடைகளை கடந்து 11 ஆண்டுகளாக ரயில்வே தூக்குப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
ஷெர்சர் தூக்குப்பாலம்
கடலுக்குள் பெரிய தூண்கள் அமைக்கப்பட்டு அதன் 2 பகுதிகளிலும் 81 டிகிரி கோணத்தில் திறந்து மூடும் வகையிலான இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டன. இந்த தூக்குப் பாலத்திற்கு ஷெர்சரின் நினைவாக என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்து
பாம்பன் பாலத்தில் 1914-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி முதன் முதலாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த பாலத்தின் மூலம் ரயில் பாதை ராமேசுவரம் தீவு மற்றும் அதன் கிழக்கு முனையில் அமைந்துள்ள இந்துகளின் புனித யாத்திரை தலமான தனுஷ்கோடி வரை சென்றது.
போட் மெயில்
அந்த கால கட்டத்தில் சென்னையில் இருந்து ஒரே டிக்கெட்டில் இலங்கைக்கு சென்று விடலாம். அதாவது சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை ரயிலில் செல்ல வேண்டும். அதன்பிறகு அங்கிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு படகுகளில் அழைத்துச் செல்வார்கள். அப்போது இலங்கையும் ஆங்கிலேயர்களின் ஆளுகையின் கீழ்தான் இருந்தது. இந்த போக்குவரத்துக்கு ‘போட் மெயில்' என்று பெயர்.
அழிந்த தனுஷ்கோடி
1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி இரவு ஏற்பட்ட கடுமையான புயலால் தனுஷ்கோடி கடற்கரையில் ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் துறைமுக பகுதிகள் முழுமையாக அழிந்தன. இதனால் தனுஷ்கோடி வரையிலான ரயில் போக்குவரத்தும் அங்கிருந்து தலைமன்னார் சென்று வந்த கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
புயலில் தப்பிய பாலம்
1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி இரவு ஏற்பட்ட பயங்கர புயலால் தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக இறந்தனர். ஆனால் அந்த புயலிலும் பாம்பன் ரயில் பாலத்திற்கு பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.அந்த புயலினால் பாலத்திற்கு ஏற்பட்ட சிறிதளவு சேதங்களை சரி செய்ய ஓராண்டு ஆனது. இதனால் அந்த காலக்கட்டத்தில் மட்டும் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மோதிய கப்பல்
அதேபோல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி கொல்கத்தாவில் இருந்து மும்பை சென்ற ஒரு கப்பல் பாம்பன் தூக்குப்பாலத்தை கடப்பதற்காக வந்த போது அந்த கப்பல் பாலத்தின் 121-வது தூணில் மோதியதில் அது முழுமையாக சேதம் அடைந்தது. இதனால் பாலத்தில் 1 வாரம் மட்டும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தற்காலிக தூண்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒரு சில மாதங்களில் சேதமடைந்த தூணை அகற்றி புதிய தூண் அமைக்கப்பட்டது.
16 பேரின் கையில்
இன்று வரையிலும் பாம்பன் தூக்குப் பாலத்தை கடக்க கப்பல்கள் வரும் போது மனித சக்தியால் தான் பாலம் மேல் நோக்கி தூக்கப்பட்டு திறக்கப்படுகிறது.
தூக்குப்பாலத்தை திறக்கவும், மூடுவதற்கும் இரு புறத்திலும் ஒரு பகுதிக்கு 8 ரயில்வே ஊழியர்கள் வீதம் 16 பேர் நின்று பற்சக்கரங்களை சுற்றுவார்கள். அப்போது தூக்குப்பாலம் சிறிது சிறிதாக மேலே உயரும். கப்பல் சென்ற பிறகும் இதே நடைமுறைப்படி பாலம் மீண்டும் ரயில் செல்லும் வகையில் பழைய நிலைக்கு கொண்டு வரப்படும்.
அகலரயில்பாதையாக மாற்றம்
பாம்பன் ரெயில் பாதை அமைக்கப்பட்ட நாள் முதல் மீட்டர்கேஜ் பாதையாகவே இருந்தது. பின்னர் 2006ல் மானாமதுரை-ராமேசுவரம் ரயில் பாதையை ரூ.24 கோடி செலவில் அகலப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. 2007 ஆகஸ்டு மாதம் முதல் அகலப்பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
நூற்றாண்டு கொண்டாட்டம்
பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கி தற்போது 100 ஆண்டுகள் ஆகிறது. பாம்பன் ரெயில்வே பாலம் இன்றுடன் (24-ந்தேதி) தனது நூற்றாண்டை நிறைவு செய்கிறது. இந்த விழாவை ரயில்வே நிர்வாகம் சிறப்பாக கொண்டாடி வருகிறது.
அப்துல்கலாம் பங்கேற்பு
பாம்பனில் வசிக்கும் பொதுமக்கள் பாலத்தின் நூற்றாண்டு விழாவை அவர்களது ஊரில்தான் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதனால் கடந்த மாதம் 28-ந்தேதி தென்னக ரயில்வே சார்பில் அங்கு, பாலத்தின் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டார்.
சுற்றுலா பயணிகள்
ராமேசுவரத்துக்கு செல்வதற்கான சிமெண்டு பாலம் வழியாக வாகனங்களில் வருபவர்கள், அதில் இருந்து இறங்கி பாம்பன் ரயில்வே தூக்குப்பாலத்தை ரசிக்காமல் செல்வதில்லை.
கடலுக்கு நடுவில் கம்பீரமாக காட்சி அளிக்கும் பாம்பன் பாலம் இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது தமிழர்களின் விருப்பம்.