58% ஜிஎஸ்டி.. நாளை முதல் எல்லா திரையரங்களும் ஸ்டிரைக்.. தீர்வை எட்டுமா..
58 சதவீத ஜிஎஸ்டியை எதிர்த்து நாளை முதல் அனைத்து திரையரங்கங்களும் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து திரையரங்குகளும் மூடப்படும். 58 சதவீத ஜிஎஸ்டியை எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் நேற்று முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 58 சதவீதி ஜிஎஸ்டியை எதிர்த்து நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர். அது திட்டமிட்டப்படி நாளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டியை எதிர்க்கவில்லை
இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் ஜிஎஸ்டியை எதிர்க்கவில்லை. கேளிக்கை வரியைத்தான் எதிர்க்கிறோம்.
நாளை முதல் ஸ்டிரைக்
இதனை எதிர்த்து நாளை முதல் வேலைநிறுத்தத்தில் இறங்குகிறோம். சினிமா துறை ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் போடப்பட்டுள்ளது. கேளிக்கை வரி என 30 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.
திரையரங்கை எப்படி நடத்துவது?
58 சதவீத வரி என்றால் நாங்கள் எப்படி திரையரங்கை நடத்த முடியும்? எங்களுக்கு வரும் 100 ரூபாய் வருமானத்தில் 58 ரூபாயை அரசுக்கே செலுத்த வேண்டியுள்ளது. எனவே, நாளை தமிழகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்கள் மூடப்படும்.
படக்காட்சியும் ரத்து
கோரிக்கை நிறைவேறும் வரை படக்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரூ.50ல் இருந்து ரூ.200 வரை சினிமா கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். பிற மாநிலங்கள் போன்று ஒரே வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும் என்று ராமநாதன் கூறியுள்ளார்.