ராஜராஜசோழனின் 1029-வது சதய விழா: தஞ்சாவூரில் கோலாகலம்
தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் ஆயிரத்து 29வது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூரில் திருமுறை அரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான திருமுறை வீதி உலா நடைபெற்றது. இதில் திருவேற்காடு ஐயப்ப சுவாமிகள் தலைமையில் யானை மீது திருமுறைகளை எடுத்தும் வாகனத்தில் ஓதுவார்கள் பாடியும் நகரை வலம் வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் சுப்பையன் தலைமையில் ராஜ ராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழாவையொட்டி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு 48 வகை திரவியங்களால் அபிசேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராஜ ராஜ சோழன்
தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1029-வது சதய விழா கடந்த இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது. நேற்று காலை துரை.செந்தில்குமார் குழுவினரின் மங்கள இசையுடன் 2-வது நாள் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத்தொடர்ந்து திருவேற்காடு கருமாரி பட்டர் அய்யப்பசுவாமிகள், கோவில் ஊழியர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார்.
திருமுறை வீதி உலா
திருமுறை ஓதுவார் திருமுறைப்பண்ணுடன் திருமுறை வீதிஉலா நடைபெற்றது. இதையொட்டி தஞ்சை பெரியகோவில் கோபுரம் போன்று வடிவமைக்கப்பட்ட தேரில் ஓதுவார்கள் பாடியபடி திருமுறை திருவீதி உலா நடைபெற்றது. திருமுறை திருவீதிஉலா 4 ராஜவீதிகளிலும் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.
பேராபிஷேகம்
அதைத்தொடர்ந்து பெருவுடையார், பெரியநாயகி அம்மன் திருமேனிகளுக்கு பேராபிசேகம் நடைபெற்றது. அய்யப்பசுவாமிகள் பொறுப்பேற்று இந்த அபிசேகத்தை 37-வது ஆண்டாக நடத்தி வருகிறார்.
48 வகை திரவியங்கள்
இதில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு 48 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. வில்வம் இலை, வன்னி இல்லை, நொச்சி இலை, பிச்சி இலை, அத்தி கொழுந்து, அரசன் கொழுந்து, ஆலம் கொழுந்து, மாங்கொழுந்து, பலா கொழுந்து, ஜெர்மன் பச்சிலை, விபூதி அபிஷேகம், தைலக்காப்பு, சாம்பிராணி தைலம், நவகவ்ய , திரவிய பொடி , வாசனை பொடி, நெல்லி முள்ளிப்பொடி, மஞ்சள் பொடி, அரிசிமாவுப்பொடி, பஞ்சாமிர்த, தேன், நெய், பால், பசுந்தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பழங்களால் அபிஷேகம்
மாதுளை முத்து, பலாச்சுளை, அன்னாசிபழம், திராட்சை, விளாம்பழம், கொளிஞ்சிபழம், நார்த்தம் பழச்சாறு, சாத்துக்குடி சாறு,எலுமிச்சை பழச்சாறு, கருப்பஞ்சாறு, இளநீர் கொண்டு அபிஷேசம் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னாபிஷேகம், சந்தனஅபிஷேகம், பன்னீர் அபிஷேகம், ஏகதாரை அபிஷேகம், சகஸ்ரதாரை அபிஷேகம், சிங்கேதனம் அபிஷேகம், வலம்புரிசங்கு அபிஷேகம், சொர்ணாபிஷேகம், கங்காஜலம் அபிஷேகம், 108 ஸ்தபன கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி அபிஷேகம் ஆகிய அபிஷேகங்கள் நடைபெற்றன.
தீப ஆராதனை
அதைத்தொடர்ந்து பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு தீப வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாட்டியம், கவியரங்கம்
அதைத்தொடர்ந்து மாலையில் ராமதாஸ் குழுவினரின் மங்கள இசையும், சங்கரநாதர் குடிக்காடு தர்மராஜின் நாத சங்கமம் நிகழ்ச்சியும், சென்னை புஷ்கலாரமேஷ் குழுவினரின் பரதநாட்டியமும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சோழப்பேரரசின் கீர்த்திக்கு ராஜராஜசோழனும், ராசேந்திரசோழனும் மேற்கொண்ட அரும்பணிகள் என்ற தலைப்பில் சுழலும் சொற்போர் நிகழ்ச்சி நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி முதல்வர் இளமுருகன் தலைமையில் நடந்தது. சதய விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.