தினகரனின் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்-அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை
18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
திருவள்ளூர்: ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையிலிருந்து நீக்கக் கோரிய வழக்கு, 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு போன்றவற்றின் தீர்ப்பை போலவே தினகரனின் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கிலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும் அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியபோது:
ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையிலிருந்து நீக்கக் கோரிய வழக்கு, 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு போன்றவற்றில் சபாநாயகர் அதிகாரத்துக்கு உட்பட்டே செயல்பட்டிருப்பது தீர்ப்பு மூலம் உறுதியாகியுள்ளது. இதே போல் தினகரன் அணியினரின் 18 எம்.எல்.ஏ.க்களின் அந்த வழக்கிலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
புதுச்சேரியில் தூய்மையாக இருந்தால் தான் இலவச அரிசி என்ற ஆளுநரின் நிலைப்பாட்டிற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அது போன்ற நிலை ஏற்படாது. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்பதே முதல்வர் உட்பட அனைவரின் விருப்பமாக உள்ளது. தினகரனும் திவாகரனும் பேசிக்கொண்டிருப்பதெல்லாம் அவர்களது குடும்ப பிரச்சனை. ஆனால் தினகரன் அணி அழிவுபாதையில் போய்கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.