39 தொகுதிகளுக்கு 1200 அப்ளிகேஷன்... சீட் கேட்டு கட்டி அலை மோதும் காங்கிரஸார்
சென்னை: எல்லோராலும் தூக்கி கடாசப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு திடீரென மவுசு கூடியிருக்கிறது.
திமுக நாடி வருகிறது, தேமுதிக தேடி வருகிறது.. பிறகென்ன சந்தோஷத்தில் குதூகலித்துக் கொண்டிருக்கிறது சத்தியமூர்த்தி பவன். அதேசமயம், சீட் கேட்டு விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்கள் மலை போல குவிந்திருக்கின்றனவாம்.
இதையடுத்து விருப்ப மனுக்களை அலசி ஆராய்ந்து வேட்பாளர்களை பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட 25 பேர் கொண்ட குழு முதல் முறையாக கூடி கலந்து ஆலோசித்து கலைந்துள்ளதாம்.
என்னா ஒரு மெத்தனம்
ஆரம்பத்திலிருந்தே கூட்டணி குறித்துக் கவலைப்படாத ஒரே கட்சி காங்கிரஸ்தான். காரணம், பல இடங்களுக்கும் முட்டி மோதுவோர், கடைசி நேரத்தில் தங்களிடம்தானே வந்து சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான்.
நினைத்தது நடந்தது
அந்தக் கட்சியினர் எதிர்பார்த்தது போலவே தற்போது கிட்டத்தட்ட நடந்து விட்டது. அதாவது முகத்தைத் திருப்பிக் கொண்டு போன திமுகவும், கண்டுக்கவே கண்டுக்காத தேமுதிகவும் காங்கிரஸ் கூட்டணிக்கு வர ஆரம்பித்துள்ளன.
உற்சாகம்.. உல்லாசம்..ஜமாய்
இதையடுத்து காங்கிரஸ் வட்டாரமும் உற்சாகமடைந்துள்ளது. இப்போதாவது வந்தார்களே என்று வந்த கட்சிகளையும் விட்டு விடாமல் தக்க வைக்கும் நடவடிக்கைகள் சீரியஸாகவே தொடங்கியுள்ளனவாம்.
விருப்ப மனுக்களுக்குள் தலைவர்கள்
இதையடுத்து விருப்ப மனுக்களைப் பரிசீலிப்பதற்காக அமைக்கப்பட்ட 25 பேர் கொண்ட மெகா கமிட்டியினர் கூடி ஆலோசித்துள்ளனர். இந்த கமிட்டி அமைக்கப்பட்டது முதல் கூடவே இல்லை. நேற்றுதான் முதல் முறையாக கூடியுள்ளனர்.
1200 மனுக்கள்
39 தொகுதிகளுக்கும் க 1200 பேர் விண்ணப்பித்துள்ளனராம். காங்கிரஸுக்கு கூட்டணியில் எத்தனை சீட் கிடைக்கப் போவது என்பது உறுதியாகத் தெரியாத நிலையில் அத்தனைத் தொகுதிகளின் விருப்ப மனுக்களையுமே பரிசீலனை செய்து வருகிறார்களாம்.
தொகுதிக்கு 5 பேர்.. ஆளுக்கு ஒருவர்
ஒவ்வொரு தொகுதிக்கும் 5 பேரின் பெயர்களை தேர்வு செய்து கட்சி மேலிடத்திடம் கொடுக்கப் போகிறார்களாம். இந்த ஐந்து பேரும் ஐந்து கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுமாம்.
டெல்லியில் வைத்து மறுபடியும் பில்டர்
இந்த ஐந்து பேர் பட்டியல் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் மேலும் வடிகட்டப்பட்டு தொகுதிக்கு இருவர் தேர்வாவர்கள். அந்தப் பட்டியல் சோனியா காந்திக்குப் போகுமாம். அவர் இறுதி வேட்பாளரைத் தேர்வு செய்வாராம்.