தமிழக அரசியலில் பெரும் புயலை வீசிய 2 தகுதி நீக்க வழக்கு தீர்ப்புகள்!
Recommended Video
சென்னை: தமிழக அரசியல் களத்தில் 2 தகுதி நீக்க வழக்குகள் பெரும் புயலை கிளப்பின. அதில் ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியாகிவிட்ட நிலையில் மற்றொரு வழக்கில்தான் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அதனைத்தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா கட்சி தலைமை ஏற்ற பின்னர் நெருக்கடி காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல வேண்டியிருந்ததால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார்.
எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தின்போது அதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தனர். இதுகுறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆளுநரிடம் மனு
இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் தமிழக ஆளுநரிடம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்ததற்காக அவர்கள் 18 பேரின் எம்எல்ஏக்கள் பதவியையும் சபாநாயகர் நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
திமுக சார்பில் மனு
இந்த உத்தரவை எதிர்த்து அந்த 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, தி.மு.க. கொறடா சக்கரபாணி ஹைகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் சக்கரபாணி கூறியிருந்தார்.
தலைமை நீதிபதி அமர்வு
இதே கோரிக்கையையை வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேரும் வலியுறுத்தி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்தனர். ஏப்ரல் 27ம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சபாநாயகர் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை, மேலும், சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்ற வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு கூறி மனுவை டிஸ்மிஸ் செய்தது. பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அமைந்திருந்தது இந்த தீர்ப்பு.
அரசியல் எதிர்காலம்
இந்த நிலையில்தான், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் மீதான தகுதி நீக்க வழக்கில் இன்று, தீர்ப்பு வெளியாக உள்ளது. தினகரன் ஆதரவாளர்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் இந்த தீர்ப்பு இருக்கப்போகிறது. எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் இந்த தீர்ப்பு ஒரு அக்னி பரிட்சையாகும். எனவே இவ்வாண்டில் தமிழக அரசியலை புரட்டிப்போடும் 2வது தீர்ப்பு இன்று வெளியாகிறது.