மாதவரத்தில் ஓபிஎஸ்-சசி அணியினர் மோதல்: 2 பேர் காயம்
சென்னை: மாதவரத்தில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணியினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணியாக உடைந்தது. தற்போது சசிகலா அணியில் இருந்து இபிஎஸ் அணி வந்துள்ளது.
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மாதவரம் போக்குவரத்து பணிமனை நுழைவாயில் அருகே ஓபிஎஸ் ஆட்கள் தங்கள் அணிக்கு ஆதரவு கோரி நேற்று மாலை 4 மணி அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
அப்பொழுது சசிகலா அணியை சேர்ந்த அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் சின்னசாமி ஆதரவாளர்களான ஜோதி, கோதண்டன் உள்ளிட்டோர் அங்கு வந்தனர்.
கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டிருந்த ஓபிஎஸ் அணியினரை பார்த்த அவர்கள் அங்கு இருந்த பந்தலை பிரித்ததுடன், நாற்காலிகளை வீசியுள்ளனர். இதை பார்த்த ஓபிஎஸ் அணியினர் கோபம் அடைந்துள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது. இதில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த இரண்டு பேர் காயம் அடைந்தனர்.