லேப்டாப்பில் மறைத்து 2 கிலோ தங்கம் கடத்தல்.. 2 பேர் கைது.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Recommended Video
சென்னை: துபாய், சார்ஜாவிலிருந்து லேப்-டாப்'பில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கக்கட்டிகளை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்துள்ளனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் வந்திறங்கியது. அப்போது விமான நிலையத்திலுள்ள சுங்க இலாகா அதிகாரிகள், பயணிகளிடம் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவை சேர்ந்தவரது உடமைகளையும் சோதனை செய்தனர். அதில், அவர் வைத்திருந்த லேப்டாப் வழக்கத்தைவிட சற்று கனத்து காணப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், லேப்டாப்பை பிரித்து பார்த்தனர்.
அதில் 9 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அவை 450 கிராம் தங்கக்கட்டிகள் ஆகும். அதன் மதிப்பு 13 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. அவற்றினை பறிமுதல் செய்த அதிகாரிகள், கேரள இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவரது பெயர் வர்கீஸ் என்பதும், வயது 29 என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல, சார்பாஜாவிலிருந்து மற்றொரு விமானம் வந்தது. அதிலிருந்து வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அஸ்மத் என்னும் இளைஞர் லேப்-டாப்பில் ஒன்றரை கிலோ தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்துள்ளது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.47 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அஸ்மத்தை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.