தம்மடித்த கண்டக்டர்.. "தட்டி" கேட்ட போலீஸ்.. கொந்தளித்த பஸ் ஊழியர்கள்.. கோவில்பட்டில் ஒரே பரபரப்பு
கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டில் கண்டக்டருக்கும் 2 போலீசாருக்கும் தகராறு ஏற்பட்டது.
கோவில்பட்டி: ஒரு கண்டக்டர் சிகரெட் பிடிக்க போய்... அந்த விவகாரம் கடைசியில் போராட்டம்.. மறியல்.. 3 மணி நேரம் டிராபிக் ஜாம் என பெரும் அவஸ்தையிலும் பரபரப்பிலும் கொண்டு போய்விட்டு விட்டது.
கோவில்பட்டி அண்ணா பஸ் ஸ்டாண்ட்டில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. புளியங்குடி அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்ப தயாராக இருந்தது.
சிகரெட் பிடித்தார்
வண்டியை எடுப்பதற்கு முன்னால் ஒரு தம்மை போட்டு கிளம்பலாம் என்று அந்த பஸ்சின் கண்டக்டர் ரூபன்குமார் பஸ் ஸ்டேண்டிலேயே நின்று சிகரெட் பிடித்து கொண்டு இருந்தார். பிறகு சிகரெட்டை அணைக்கும்போது 2 பேர் அங்கு வந்து நின்றனர். அவர்கள் யூனிபார்ம் இல்லாத போலீஸ்காரர்கள். ஒருவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மற்றும் ஒரு காவலர்.
சிகரெட் பிடிக்கலாமா?
"பஸ் ஸ்டாண்டில் நின்று சிகரெட் பிடிக்கலாமா?" என்று இருவரும் கண்டக்டரிம் கேட்டனர். யூனிபார்ம் போடாமல் மஃப்டியில் இருவரும் இருந்ததால், கண்டக்டர், "நீங்கள் யார் இதை கேட்க? நான் சிகரெட் பிடிச்சா உங்களுக்கு என்ன?" என்று கேட்டார்.
பணம் காணவில்லை
உடனே 2 பேருக்கும் கோபம் வந்து "போலீஸ்காரர்களையே யாருன்னு கேட்கிறீயா?" என்று கண்டக்டரை தாக்க தொடங்கிவிட்டனர். இதில் கண்டக்டருக்கு தலை மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது. இப்படி அடித்து துவைக்கும்போது, கண்டக்டர் பையில் வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட், செல்போன் ஆகியவற்றையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.
போராட்டம்
இந்த சம்பவம் தீயாக பரவியதை அடுத்து, மற்ற அரசு பஸ் ஊழியர்கள் திரண்டு வந்துவிட்டனர். "இப்படியா ஒரு கண்டக்டரை அடிப்பது, அடித்த இருவரும் கண்டக்டரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அதுவரை நாங்கள் பஸ்கள் எடுக்க போவதில்லை" என்று கூறி எல்லோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிராபிக் ஜாம்
ஏற்கனவே கோவில்பட்டி பஸ் ஸ்டேண்டில் கூட்டம் நிறைந்து வழியும். இப்போது தீபாவளி டைம் வேறு. இன்னும் நெரிசல் அதிகமாகவே இருந்தது. இதில் இப்படி பஸ் ஊழியர்கள் எல்லாம் போராட்டத்தில் ஈடுபடவும் மக்கள் கூட்டம் திண்டாட ஆரம்பித்துவிட்டது. யாராலும் எந்த பஸ்ஸிலும் ஏறவும் முடியவில்லை. இறங்கவும் முடியவில்லை. 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு எல்லா வண்டிகளும் நின்று மொத்தமாக வரிசைகட்டி நின்று டிராபிக் ஜாம் ஆகிவிட்டது. உடனே மாவட்ட எஸ்பி முரளிரம்பா விரைந்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார்.
3 மணி நேரம் பாதிப்பு
போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதற்கு பிறகுதான் எல்லோரும் கலைந்து சென்று பஸ் எடுக்க போனார்கள். இந்த போராட்டம் காரணமாக கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டார்கள்.